ரஷியா பறவையை காண பயணிகள் ஆர்வம்
நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பசுமைமாறாக்காடுகள் நிறைந்துள்ளன. இங்குள்ள வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு சீசன் காலமாகும். இந்த காலத்தில் லட்சக்கணக்கான பறவைகள் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து நாடு திரும்பும்.
தற்போது பருமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் செங்கால் நாரை, கூழைகிடா, சிறவி, உள்ளான், கடல் ஆலா உள்ளிட்ட 40 வகையான பறவைகள் வந்து மரங்களில் கூடுகட்டத் தொடங்கியுள்ளன. ரஷ்யாவைச் சேர்ந்த பறவை ஒன்று 9 ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்து வந்துள்ளதால் அவற்றை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஏரிகளில் தண்ணீர் அதிகம் இருப்பதால் பறவைகள் அருகில் சென்று பார்க்க முடியவில்லை என்று பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பறவைகளுக்கான உணவு
கோடியக்கரையில் பறவைகள் வந்து தங்கிச் செல்வதற்கான தட்பவெட்ப நிலை நிலவுகிறது. அவை உண்பதற்கான சிறு மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாலும், கடல்நீருடன் நன்னீர் கலக்கும் முகத்துவாரங்கள் அதிகம் உள்ளதாலும் பறவைகள் இங்கு அதிகம் வருவதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் பறவைகள் வருவதை கணக்கிட பறவையின் கால்களில் வளையமிடப்படுகிறது. அப்படி வளையமிடப்பட்ட பறவைகள் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். வெளிநாட்டு பறவையினங்களில் வடகிழக்கு ரஷியாவில் இருந்து கண்ணாடி மூக்கு உள்ளான் என்ற பறவை 9 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து வந்துள்ளது. சிறவி வகை பறவையான கோல்டர் பிளவர் என்ற பறவை நான்காயிரம் கிலோமீட்டர் தூரம் கடந்து கோடியக்கரையை வந்தடைந்துள்ளதாக சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.