துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் ’இனி’ கவிதைச் சிறப்பிதழ் வெளியீடு
விழாவின் சிறப்பு விருந்தினராக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைமைக் கழகப் பொதுச் செயலாளரும், இனிய திசைகள் மாத இதழ் ஆசிரியருமான பேராசிரியர், டாக்டர் சேமுமு முகமதலி, தாய் மண் வாசகர் வட்டம் அமைப்பின் தலைவர் செ.ரெ.பட்டிணம் மணி மற்றும் இலங்கையைச் சேர்ந்த காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களும் கலந்து கொண்டனர்.
ஜெயா பழனி, மற்றும் ஸ்ரீவாணி ஆனந்தன் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கிய விழா , இணைச்செயலாளர் ஜியாவுதீனின் வரவேற்புரையைத் தொடர்ந்து புதிய உறுப்பினர் அறிமுகத்துடன் சூடு பிடித்தது.
நிகழ்ச்சித் தொகுப்புடன், கவியரங்கத்தையும் பொறுப்பேற்றுக் கொண்ட ஆலோசகர் காவிரிமைந்தன், ஆசியரியர் குழுவின் அங்கமான இரஜகை நிலவனுடன் சேர்ந்து கவியரங்கைத் தொடங்க, கவிஞர்கள், ஆதிபழனி, கிளியனூர் இஸ்மத், தஞ்சாவூரான் பாரூக்,அத்தாவுல்லா, துரை மலைவேல், ஜெயாபழனி, சந்திரசேகர், நீரோடை மலிக்கா, முகவை முகில், முகவை முத்து,புதுவை ரமணி, ஜியாவுதீன்,சிம்மபாரதி, சரவணன்,சண்முக சுந்தரம், விருதை சையது ஹுசைன், இரஜகை நிலவன் மற்றும் காவிரிமைந்தன் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதே நிறைவுற்றது.
அதனைத் தொடந்து நிகழ்வின் அடுத்த கட்டமாக இதழ் வெளியீட்டின், முதல் இதழை பேராசிரியர், டாக்டர் சேமுமு முகமதலி வெளியிட அமீரக செய்தியாளர் முதுவை ஹிதாயத் பெற்று கொண்டார், இரண்டாவது இதழை பட்டிணம் மணி வெளியிட முத்துப்பேட்டை பரூக் அலி பெற்றுக் கொண்டார், மூன்றாவது இதழை டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் வெளியிட முகவை முகில் பெற்றுக் கொண்டார், நான்காவது இதழை எஸ்.எம்.பாரூக் வெளியிட பரத் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
தொடர்ச்சியாக சிறப்பு விருந்தினர்களுக்கு கீழைராஸா, மலைவேல் பொன்னாடை போர்த்த, சிம்மபாரதி ஆதி பழனி நினைவுப்பரிசுகளை வழங்கினர்.
அடுத்து, பேராசிரியர் சேமுமு அவர்களை அறிமுகப் படுத்தலுடன் தன் வாழ்த்துரையை வழங்கிய காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள், வானலை வளர்தமிழின் விழாக்களில் தான், அமீரகம் வரும் அத்தனை முறையும் கலந்து கொள்வது வழக்கம் என்றும், ஒவ்வொரு முறையும் அதன் மெருகேற்றலைக் காண முடிகிறதென்றும், அதை இந்த அமைப்பு, ஐந்துவருடங்களாகத் தொடர்ச்சியாக செய்துவருவது ஒரு சாதனை என்றும் பாராட்டிப் பேசினார்.
அதன் பின் பேசிய பட்டிணம் மணி, தனித்துவமான தமிழ் உணர்வுடன் செயல்படுவது வானலை வளர்தமிழின் சிறப்பு என்று பேசியதோடு குழந்தைகள் போல் கள்ளம் கபடம் இல்லா வாழ்வை வாழ வேண்டுமென்று,முத்தாய்ப்பான கவிதையுடன் தன் சிறப்புரையை நிறைவு செய்ய, தொடர்ச்சியாக சிறப்புரையாற்ற வந்த பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமதலி தன் கணீர் குரலால் சபையைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், நல்ல கவிதை எது என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும் அதற்காக எழுதிக் கொண்டே இருங்கள் என்ற வேண்டுகோளுடன், அருமையான இலக்கியப் பேச்சால் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டதுடன், இது போன்ற தமிழ் நிகழ்விற்கு உறுதுணையாக இருந்து வரும் தலைவர் கோவிந்தராஜ் அவர்களைப் பெரிதும் பாராட்டினார்.
நிகழ்வை காவிரிமைந்தன் சிறப்பான முறையில் தொகுத்து வழங்க, இணைச்செயலாளர் கீழைராஸாவின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
விழா ஏற்பாடுகளை காவிரிமைந்தன், சிம்மபாரதி, ஜியாவுதீன், கீழைராஸா, அபுதாபி டி.எம். பழனி, துரை மலைவேல், ஆனந்தன் ஆகியோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
பணியின் நிமித்தமாக அமீரகம் சென்ற தமிழ் மக்கள் வானலை வளர்தமிழ் அமைப்பின் மூலம் மாதந்தோறும் ஒவ்வொரு தலைப்பில் கவியரங்க நிகழ்வினை நடத்தி வருவதோடல்லாமல் அதனைத் தொகுத்து நூலாக வெளியிட்டு வரும் இந்நிகழ்வு விரைவில் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றாலும் ஆச்சரியமில்லை.