ஷார்ஜாவில் 30-வது சர்வதேச புத்தகக் கண்காட்சி- வெளிநாட்டு பதிப்பகங்கள் பங்கேற்பு
கடந்த 16ம் தேதி துவங்கிய இந்த புத்தக கண்காட்சியை ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி திறந்து வைத்தார். 30வது ஆண்டாக நடந்து வரும் இக்கண்காட்சியில் 42 நாடுகளைச் சேர்ந்த 800 புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
அரபு, ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த நூல்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கான பிரத்யேக புத்தக நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு நாளும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூலாசிரியர்களின் உரை, பெண்களுக்கான சமையல் நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான போட்டிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
துவக்க நாளன்று கண்காட்சிக்கு வந்திருந்த வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி மறைந்த தனது மனைவி எழுதிய நூலை வெளியிட்டார். நவம்பர் 18ம் தேதி ஷோபா டேயும், 19ம் தேதி எம்.டி. வாசுதேவன் நாயர் மற்றும் டாக்டர் லக்ஷ்மி நாயர் ஆகியோரும், 20ம் தேதி டாக்டர் சசிதரூரும் பங்கேற்றனர்.
இன்று(21ம் தேதி) சேத்தன் பகத், 23ம் தேதி ரஸ்கின் பாண்டு, 24ம் தேதி ஜெய்ஸ்ரீ மிஷ்ரா, 25ம் தேதி எம். முகுந்தன் ஆகியோர் பங்கேற்கின்றனர். நாளை(22ம் தேதி) உம்பயி குழுவின் கஸல் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் தன்னார்வ நிறுவனமாக செயல்பட்டு வரும் தேசிய புத்தக நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இந்திய நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
தேசிய புத்தக நிறுவன அரங்கில் இந்தி, உர்தூ, ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழி நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் நூல்கள் காட்சிக்கு வைக்கப்படவில்லையே என இணை இயக்குநர் அனில் கன்னாவிடம் கேட்கப்பட்டபோது தமிழர்கள் அமீரகத்தில் இருப்பார்கள் என தனக்கு தெரியாது என்ற தனது அறியாமையினை வெளிப்படுத்தியது ஆச்சரியப்பட வைத்தது.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய நிறுவனம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் இருக்கும் பல்வேறு தமிழ் அமைப்புகள் திரைப்படத்துறை சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும் இதுபோன்ற அறிவு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தொலைக்காட்சியில் தொலைந்த இதயங்களை மீட்கலாம்.