முல்லைப் பெரியாறு: தீர்வு காண மத்திய அரசுக்கு ராசல் கைமா தமிழ், மலையாள அமைப்புகள் கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக தமிழக-கேரள எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரு மாநிலங்களுக்கிடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராசல் கைமாவில் ராசல் கைமா தமிழ் மன்றமும், கேரள அமைப்பான சேதனாவும் சேர்ந்து நடத்திய சௌஹ்ருத் சங்கமம் என்ற கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் இரு அமைப்புகளும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டன.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ராசல் கைமா வாழ் தமிழ் மக்களும், கேரள மக்களும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். முல்லைப் பெரியாறு பிரச்சனையால் இரு மாநில மக்களும் விரும்பத்தகாத முறையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது நமது நாட்டின ஒருமைப்பாட்டினை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
நமது இந்திய மக்கள் சகோதர, சகோதரிகள் என்ற உணர்வோடு வாழ்ந்து வருபவர்கள். எனவே வன்முறையிலும், கலவரங்களிலும் ஈடுபடுவது விரும்பத்தக்கதல்ல. ஆகவே, இப்பிரச்சனையில் இந்திய அரசு உடனே தலையிட்டு நல்ல தீர்வு காண வேண்டும்.
முல்லைப் பெரியாறு பிரச்சனையால் மேலும் வன்முறை செயல்களும், கலவரங்களும் மற்ற இடங்களுக்கு பரவுவதற்கு முன்பு மத்திய அரசு தலையிட்டு சுமூகமான தீர்வு கண்டு இந்தியாவின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications