விவாகரத்து கொடுமை!
அமைதியான பூங்கா. பட்டாம் பூச்சிகள் படபடப்புக்கும் மெல்லிசையும், ரெட்டை வால் குருவிகளின் கீச் கீச்சும், சில் வண்டுகளின் ரீங்காரமும் மனதை லேசாக்குவதாக இருந்தது.
பூங்காவில் இருந்த பெஞ்சில் வித்யா உட்கார்ந்திருந்தாள். அந்த பூங்காவில் எந்தக் கவலையும் இன்றி புள்ளி மான்களைப் போல துள்ளி விளையாடும் பிள்ளைகளை தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் தானும் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் தெரிந்தது.
தன்னைச் சுற்றிய உலகம் குறித்த சிந்தனை சற்றும் இல்லாமல், அந்த குட்டிக் குழந்தைகள் விளையாடுவதை பார்த்து லயித்திருந்த அவளை ஒரு இளைஞன் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
குழந்தைகள் இங்கும் அங்குமாக ஓடியபோது அந்த இளைஞன் அருகில் ஓடினார்கள். அப்போது தான் தன்னை யாரோ ஒரு ஆண் வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை அறிந்தாள் வித்யா. என்ன விந்தை அவளுக்கு அந்த இளைஞன் மீது கோபம் வரவில்லை. மாறாக வித்யாவும் அவனையே பார்க்கலானாள்.
இந்த காட்சியை அங்கிருந்தவர்களும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்கள். திடீர் என்று அந்த இளைஞன் வித்யா அருகில் வந்தான். உடனே அவள் எழுந்து நின்றாள். இருவர் கண்ணிலும் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன. இருவரும் பேசாமல் சிலை போல் நின்றனர்.
பிறகு வித்யா அவனை கட்டிக் கொண்டு அழுதாள். கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர். வித்யாவை அழ விட்ட அந்த இளைஞன் பின்னர், அக்கா இத்தனை நாட்களாய் எங்கிருந்தாய்? என்று தளுதளுத்த குரலில் கேட்டான்.
ஆம், அந்த இளைஞன் வித்யாவின் சகோதரன். இவர்களது பெற்றோர்கள் வித்யாவும், அவளது தம்பியும் சிறு வயதாக இருந்தபோதே பிரிந்து போய் விட்டனர் - விவாகரத்தின் மூலம். விவாகரத்து பெற்றபோது வித்யா ஒருவரிடமும், அவளது தம்பி இன்னொருவரிடமுமாக பிரிந்து வாழத் தொடங்கினர்.
பிரிந்து போன பெற்றோர்களால் ஆளுக்கொரு இடத்தில் வளர்ந்த உடன்பிறப்புகள் இவர்கள். சகோதரப் பாசத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் செய்து விட்டது அவர்களின் பெற்றோரின் பிரிவு. குழந்தைகளாய் பிரிந்த அவர்கள் பல ஆண்டுகள் கழித்து தற்செயலாக தற்போது தான் சந்திக்கிறார்கள். அதனால்தான் அந்த அழுகை, ஆதங்கம், பாசத்தின் புது வெள்ளம்.
இந்தக் கதையிலிருந்து என்ன தெரிகிறது...?
மனிதன் உணர்ச்சி இல்லாத எந்திரமாக மாறி வருகிறான். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதெல்லாம் இன்று காமெடியாகி விட்டது.
நினைத்தவுடன் சேருவதும், தேவையில்லை என்று உணர்கிறபோது பிரிவதும்தான் இன்றைய பெரும்பாலான திருமணங்களின் இலக்கணமாகியுள்ளது.
திருமணம் என்ற பந்தத்தின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள இன்று யாருக்கும் நேரம் இல்லை, விருப்பமும் இல்லை. காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு என்று ஓட ஆரம்பித்தோமே அன்றே நம்மை விட்டு நமது கலாச்சாரமும், கண்ணியமும் கூட பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கி விட்டது.
விவாகரத்து சாதாரண விஷயமாகிவிட்டது. பெற்றோர்களின் சண்டையில் சிக்கித் தவிப்பது பிள்ளைகள் தான். பெற்ற பிள்ளைகளின் நலனை கருத்தில் வைத்தாவது பெற்றோர்கள் விவாகரத்தை ரத்து செய்வது குறித்து சிந்திக்கலாமே.
அடுத்த வாரம் இன்னொரு கதையுடன்..!












Click it and Unblock the Notifications