இந்த ஆண்டு விவசாயிகளுக்கு உப்புசப்பில்லா பொங்கல்
தை மாதம் பிறந்தால் நமக்கெல்லாம் நல்ல வழி பிறக்கும், நல்லது நடக்கும் என்று உழவர்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டோ பொங்கல் திருநாள் நெருங்கியும் உழவர்கள் முகத்தில் மலர்ச்சியைக் காணவில்லை. எப்படி மலர்ச்சி இருக்கும். தென்மேற்கு பருவமழை மட்டுமின்றி வடகிழக்கு பருவமழையும் சேர்த்து அவர்களை ஏமாற்றி விட்டது.
மழை பெய்யும், நெல் விளையும் நம் வாழ்வு செழிக்கும் என்று நம்பிய உழவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. மழை பொய்த்துவிட்டதால் பயிர்கள் வாடிவிட்டன. தங்க சம்பா நெல்லைக் காண ஆசைப்பட்டவர்கள் ஏக்கத்தில் உள்ளனர். எப்படியும் மழை பெய்துவிடும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி விவசாயம் செய்தவர்கள் தற்போது கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
அதிலும் சிலர் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்படி கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற மனநிலைமையில் இருக்கையில் பொங்கல் எப்படி அவர்களுக்கு தித்திக்கும்.
உழவர்கள் விளைவிக்கும் அரிசியை வைத்து ஊரெல்லாம் பொங்கல் கொண்டாடும்போது அவர்கள் மட்டும் பணமில்லாமல் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த பொங்கல் அவர்களுக்கு உப்புசப்பில்லா பொங்கல் தான்.