திருப்பாவை பாடல் - 4
திருப்பாவை பாடல் - 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
ஆழி மழைக்கண்ணா! என்று பர்ஜன்ய தேவனை அழைக்கிறாள் ஆண்டாள். பர்ஜன்யனான வருணன் மட்டுமே உலகம் உய்ய நீரைத்தருகிறான். நீரின்றி அமையாது உலகு அல்லவா? இந்த பர்ஜன்ய தேவன் நாரணனைப்போலே, படைத்தல் - அழித்தல் தொழில்களை விட்டு ரக்ஷிக்கும் தொழிலை கைக்கொண்டிருக்கிறான் என்று ஒற்றுமை சொல்லி நமக்கு உணர்த்துகிறாள் ஆண்டாள். ஆழ்கடலினுள்ளேயே புகுந்து உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணிரை எடுத்துக்கொண்டு ஊழி முதல்வனான எங்களின் நாராயணின் உடல் போல மெய் கருத்து, பாற்கடலில் துயிலும் பத்மநாபனின் திருத்தோள்களில் உள்ள சுதர்சனாழ்வான் மின்னுவது போலே மின்னலை ஏற்படுத்திக்கொண்டு, அந்த பத்மநாபனின் சங்கொலிபோல் நின்று அதிர்ந்து இடி இடித்து, அவனது சார்ங்கம் எனும் வில் எப்படி சரமழையை பொழிந்ததோ அப்படி தயங்காமல் பொழிந்து நாங்கள் சுபிக்ஷத்துடன் வாழ பெய்திடாய் அதை எண்ணி நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராட போகிறோம் என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.
திருவெம்பாவை பாடல் - 4
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
ஒளிவீசும் முத்தைப் போலப் புன்னகை செய்பவளே! உனக்கு மட்டும் இன்னும் விடியவில்லையா? என்று உறங்கும் பெண்ணை எழுப்புகின்றனர் தோழியர்.அதற்கு அவளோ... 'அழகான கிளியைப் போலப் பேசும் நமது தோழிமார் எல்லாரும் வந்துவிட்டார்களா என்ன!' என்று கேட்கிறாள்.
அதற்கு வெளியில் இருக்கும் பெண்களோ... "நாங்கள் வந்திருப்பவர்களின் தலையை எண்ணி அதற்குப்பின் உன் கேள்விக்குப் பதில் சொல்கிறோம். அதுவரையில் தூங்கித் தூங்கி வீணாகக் காலத்தைப் போக்காதே.... இப்போது உடனடியாக நாங்கள் எண்ணிச் சொல்ல மாட்டோம். ஏன் தெரியுமா? வானத்தின் அமுதம் போன்றவனை, வேதங்கள் எல்லாம் கூறும் உயர்ந்த உட்பொருள் ஆனவனை, காண்பதற்கு மிக இனியவனான நம் சிவபெருமானை நாங்களெல்லாம் பாடிப்பாடி உள்ளம் கசிந்து உருகிக் கொண்டிருக்கிறோம்... வேண்டுமானால் நீயே வந்து எண்ணிப் பார். எண்ணிக்கை குறைவாக இருந்தால் நீ எங்களோடு சேர வேண்டாம். மறுபடியும் போய்ப் படுத்துத் உறங்கிக்கொள்' என்கின்றனர்.