மூத்த இடதுசாரித் தலைவர் சங்கரய்யாவுக்கு காயிதேமில்லத் விருது- பணத்தை அறக்கட்டளைக்கே வழங்கினார்!
சென்னை: முதுபெரும் இடதுசாரித் தலைவர் சங்கரய்யாவுக்கு சமூக அறக்கட்டளை சார்பில் காயிதேமில்லத் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன் வழங்கப்பட்ட ரூ2 லட்சத்துக்கு 50 ஆயிரத்தை விருது வழங்கிய அறக்கட்டளையின் கல்விப் பணிக்கே திருப்பி கொடுத்தார் சங்கரய்யா.
சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மைக்கான விருது வழங்கும் விழா மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது.
அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கும், முன்னாள் லோக்சபா எம்.பி. சையத் ஷஹாபுத்தீன் சாஹிப்புக்கும் வழங்கப்பட்டது.
சையத் ஷஹாபுத்தீன் சாஹிப் சார்பாக அவரது மகளும், பீகார் மாநில முன்னாள் அமைச்சருமான பர்வீன் அமானுல்லா விருதை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய என்.சங்கரய்யா, காயிதேமில்லத் கண்ணிய மிக்கவராக மட்டுமில்லாமல், பொதுவாழ்வில் நேர்மை மிக்கவராகவும், எளிமையான மனிதராகவும் வாழ்ந்தவர். எம்.பி.யாக இருந்தபோதும், யாருடைய உதவியையும் நாடாமல் தனியாக எங்கும் சென்றுவரும் எளிமைக்குச் சொந்தக்காரர்.
மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசாக நம் நாடு என்றைக்கும் திகழ வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியன் நான். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான பென்ஷனைக்கூட நான் பெறுவதில்லை. காயிதே மில்லத் பெயரால் வழங்கப்படும் இந்த விருதினைப் பெறுவதில் மகிழ்ச்சி. இந்த விருதோடு வழங்கப்படும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை காயிதே மில்லத் அறக் கட்டளையின் கல்விப் பணிக்கே வழங்குகின்றேன் என்றார்.