துபாயில் கண்கவர் பரதநாட்டியம் : ஏராளமானோர் கண்டுகளிப்பு!
துபாயில் நடைபெற்ற குமாரி ஷ்ரத்தா ஸ்ரீராம ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
துபாய் : துபாயில் டாக்டர் ராஜஸ்ரீ வாரியர் தலைமையில் குமாரி ஷ்ரத்தா ஸ்ரீராம ஐயரின் பரதநாட்டியம் பார்வையாளர்களை வெகுவாக கவந்தது.
துபாயில் கடந்த 11 ஆம் தேதி குமாரி ஷ்ரத்தா ஸ்ரீராம ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் டாக்டர் ராஜஸ்ரீ வாரியர் தலைமையில் வெல்லிங்டன் அரங்கத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. குரு மதுராமீனாக்ஷீ ஸ்ரீனிவாஸ் அவர்களின் பாட்டும் நட்டுவாங்கமும் ஸ்ரீனி கண்ணூர் அவர்களின் மிருதங்கம், திரு சுரேஷ் நம்பூதிரி அவர்களின வயலின், திரு பிரியேஷ் அவர்களின் புல்லாங்குழல் அனைத்தும் வெகு இனிமையாக இருந்தது.
புஷ்பாஞ்சலி, அலாரிப்பில் ஆரம்பித்து கௌத்துவம், வர்ணம், பதம், கீர்த்தனம், தில்லான என ஷ்ரத்தா அசராமல் ஆடிய அனைத்து நடனங்களும் வெகு நளினமாக காண்போர் கண்களைக் கவர்ந்தன. அவர் ஆடிய ஆண்டாள் கௌத்துவம்மு சின்னஞ்சிறு கிளியே பதமும் அவற்றில் அவர் வெளிப்படுத்திய பாவமும் அனைவரின் உள்ளங்களை கொள்ளை கொண்டன. விழாவின் ஏற்பாடுகளை ஷ்ரத்தாவின் பெற்றோர் திருமதி பிரேமா ஸ்ரீராமவும்,திரு ஸ்ரீராம ஸ்ரீனவாசனும் சிறப்பாக செய்திருந்தனர்.
குமாரி ஷ்ரத்தா, குரு திருமதி மீனாட்சி ஸ்ரீனிவாஸ் நடத்திவரும் ஸ்வராலயா நடனப்பள்ளியில் கடந்த 7 வருடங்களாக பரதநாட்டியம் பயின்று வருகிறார். குமாரி ஷ்ரத்தா சிறு வயதுமுதலே பல மேடைகளில் நடனமாடி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சம்பவாமி யுகே யுகே, விவேக் 150 போன்ற நாட்டிய நாடகங்களிலும் பங்கேற்று இருக்கிறார். கடந்த வருடம் விபிஜியோர் நடத்திய நர்த்தன சாம்ராட் போட்டியில் பல பிரிவுகளில் வெற்றி பெற்றார்.
இவர் கர்நாடக சங்கீதத்தையும் முறையாக குரு மீனாட்சி ஸ்ரீனிவாஸிடம் முறையாக பயின்று வருகிறார். மோகனா மேடைகளில் பல பஜனை பாடல்களும் திருப்புகழ் அஷ்டபதி பாடல்களும் சத்யா சாய் அமைப்பின் சார்பாக பல பஜனை பாடல்களும் பாடி இருக்கிறார்.ஷ்ரத்தா கூடை பந்து விளையாட்டிலும் கை தேர்ந்தவர்.
ஆங்கில கவிதை எழுதுவதிலும் திறமை பெற்றவர். நீச்சல், ஓவியம் இவரின் பொழுதுபோக்கு. இவர் பேச்சு போட்டியிலும் பல பரிசுகளை வாங்கி உள்ளார். இப்படி பல துறைகளிலும் சிறந்த விளங்கும் ஷ்ரத்தாவிற்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. ,நதியன் ஹை ஸ்கூல்லில் 9வது படிக்கும் குமாரி ஷ்ரத்தா எதிர்காலத்தில் நாட்டிய உலகில் சிறந்த இடத்தை அடைவார் என்பதில் சந்தேகமில்லை.