சாரலில் நனைந்து.. ஜில் ஜில் ஐஸ்கிரீம்.. மறக்க முடியாத மழை நினைவுகள்!
சென்னை: நமது வாசகர் பஸ்மினாவின் மழைக்கால நினைவுகள்...
மழை - நம் வாழ்வில் வகிக்கும் ஒரு முக்கியமான அங்கம். மழை பற்றியும் மழை சார்ந்த நிகழ்வுகளையும் பற்றி பேச ஏராளமான நினைவுகள் அனைவருக்கும் இருக்கும். அதில் சிலவற்றை பகிர்கிறேன்.
நான் பள்ளி படிக்கும் பொழுது நடந்த ஒரு நிகழ்வு. அனைவருக்கும் மழை பெய்யும் பொழுது ஐஸ்கிரீம் சாப்பிடணும் என்னும் எண்ணம் உண்டு. எனக்கும். அது வந்தது. அது நடந்தது எனது பத்தாம் வகுப்பில். நான் மற்றும் எனது நண்பர்கள் பள்ளி முடிந்தவுடன் நேராக ஐஸ்கிரீம் சாப்பிட சென்றோம். முதன் முதலில் வீட்டுக்கு தெரியாமல் சென்ற நொடி. நெஞ்சில் பயம் இருந்தது மாட்டி கொள்வேனோ என்று இருந்தாலும் எனது நண்பர்கள் உடன் இருந்த அந்த சூழல் என்னை மகிழ்வித்தது. மழையின் சாரலில் நனைந்து கொண்டே ஐஸ் கிரீம் சாப்பிட்ட அந்த தருணம் இன்றும் என்னுள் உள்ள நினைவுகளை வாழ வைக்கிறது.
மழை பெய்யும் தருணம் சுட சுட வடை பஜ்ஜி சாப்பிட நல்லா இருக்கும். நான் பனிபுரியும் இடத்தில் டீ கொண்டு வருவது வழக்கம். அன்றைய தினம் அந்த அண்ணாவிற்கு போன் செய்து சூடாக வடை வாங்கி வர சொன்னேன். அந்த அண்ணாவும் எங்களுக்காக வடை வாங்கி வந்தார். இஞ்சி டீ மற்றும் சூடான உழுந்து வடை ஆஹா என்ன ஒரு ருசி, ஒரு ஈடில்லா உணர்ச்சி. என்னுடன் பனி புரியும் அனைவரும் அடித்து பிடித்து வடை சடப்பிடுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.!!!
ஒரு முக்கியமான நிகழ்வு 2016 ஆம் ஆண்டு மழை பெய்தபொழுது நான் விடுதியில் தங்கி இருந்தேன். பவர் இல்லாமல் 2 நாட்கள் போனில் சார்ஜ் இல்லாமல் ஒரு வகையான பயத்துடன் இருந்த நாட்கள். அப்பொழுது எனது ஆஃபிஸில் விடுமுறை விட்டார்கள். சென்னை மொத்தம் அவர்களது சொந்த ஊருக்கு சென்ற நேரம். சரி கிளம்பலாம் என்று முடிவு எடுத்து வெளிய வந்தேன். விடுதி வெளியே முழுதும் தண்ணீர். முழங்கால் அளவு தண்ணீரில் கடந்து வந்து மின்சார ரயில் ஏற ஸ்டேஷன் வந்த பொழுது காத்திருந்தது அதிர்ச்சி.
திருவான்மியூர் ஸ்டேஷன் முழுதும் வெளியில் வரை மக்கள் நின்ற வண்ணம் இருந்தனர். செய்வதறியாது நின்ற பொழுது என்னுடன் பனி புரியும் நண்பன் ஒருவன் நின்றதை பார்த்து அவனிடம் எனக்கும் டிக்கெட் வாங்கி தருமாறு கூறினேன். அவனும் எனக்கும் எனது தோழிகளுக்கும் டிக்கெட் வாங்கி தர சம்மதித்தான். அதன் பின் அனைவரும் பணம் எடுக்க ஏடிம் தேடினோம். ஒன்றும் தென்படவில்லை. ஆதலால் மயிலாப்பூர் ஸ்டேஷனில் ஏடிம் கண்டுபிடித்து பணம் எடுத்து கொண்டு அரக்கோணம் வழியாக சேலம் சென்று, பின் ஸ்டேஷனில் மூன்று மணி நேரம் காத்திருந்து மதுரை செல்லும் ரயில் ஏறி எனது வீட்டிற்குள் போவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. 8 மணி நேர பயணத்திற்கு 2 நாட்கள் பயணித்து நான் சென்ற அந்த அனுபவம் என்றும் எனது நினைவில் இருக்கும்,
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள் அதே போல "மழையால் நம்மை வாழ வைக்கவும் முடியும் நம்மை அழிக்கவும் முடியும்" என்பதை உணர்ந்து மக்களாகிய நாமும் செயல்பட்டால் இந்த உலகை நம் சொர்க்க பூமியாக மாற்றி வாழ முடியும்.
- பஸ்மினா