கையில் குடை இருந்தால்...!
-மகுடேசுவரன்
முற்காலத்தில் குடை என்பது அழகிய நாகரிகப் பொருள். அரசர்கள் வெண்கொற்றக்குடை நிழலில் நாட்டுக்குள் வலம் வருவார்கள். யானை மீது ஏறி வந்தாலும் அரசனின் பின்னே சேவகன் குடை பிடித்திருப்பான். செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அரசனின் அடையாளங்கள். அதனால் குடை பிடித்துச் செல்வோரும், குடை வைத்திருப்போரும் அரசனைப்போல் வாழ்கின்றவர்களாகக் கருதப்பட்டார்கள்.

இன்றைக்கும் திருமண ஊர்வலத்தில் மணமக்களுக்குக் குடைபிடித்தல் கட்டாயமான மணவினையாக இருக்கிறது. ஊர்ப்புறத்தில் வாழும் பெரியவர்கள் குடையும் பையுமாகத்தான் வெளியே கிளம்புவார்கள். அந்தக் குடையின் நடுத்தண்டு உறுதியாக இருக்கும். கைப்பிடிப் பகுதியில் நன்கு வளைந்திருப்பதால் அதை ஊன்றுகோலாக்கிக் கொள்வார்கள். மழை வெய்யிலுக்கு நம்மைக் காக்கும் குடையைப் பற்றி அந்தக் காலத்திலேயே வெண்பா இயற்றியிருக்கிறார்கள். இப்பாடலை எழுதிய புலவர் பெயர் தெரியவில்லை. ஆனால், குடையைப் பற்றிய இந்தப் பாடல் தனிப்பாடல்கள் தொகுப்பில் இடம்பெற்று நிலைத்துவிட்டது.
பகலோன் தெறுங்கிரணம் பாய்பறவை எச்சம்
மிகமேலுற தகற்றும் விண்ணின் - முகிலதனால்
பெய்யுமழை யைத்தடுக்கும் பேரழகு மாமொருவர்
கையிற்கு டையிருந்தக் கால்.
பகலோன் என்றால் சூரியன். தெறுதல் என்றால் சுடுதல். கிரணம் என்றால் கதிர்கள். சூரியனின் சுடுகின்ற கதிர்கள், விண்ணில் பாய்ந்து பறந்து செல்கின்ற பறவையின் எச்சம். மிகமேலுறதகற்றும் என்றால் நம்மீது மிகுந்து மேலுற்றுப் படுகின்றவற்றைத் தடுத்து அகற்றும். விண்ணின் மேகங்களால் பெய்யும் மழையை நம்மீது படாமல் தடுக்கும். இத்தகைய பயன்கள் மட்டுமில்லாமல் ஒருவர்க்குப் பேரழகையும் தருமாம். கையில் குடை இருந்தக்கால். கையில் குடை இருக்கும்போது.
கையிலே குடையிருந்தால் பகலவனின் சுடுகதிர்களும் பறவை எச்சமும் மேல்படாமல் அகற்றிவிடும். விண்ணின் முகிலிலிருந்து பெய்யும் மழை நம்மீது படாமல் தடுக்கும். பேரழகையும் தரும்.












Click it and Unblock the Notifications