For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு பழைய காதலும் ஒரு கவிதையும்

By Staff
Google Oneindia Tamil News

உன் காதல் கறை படிந்த
என் கவிதைகளை
இவர்கள் யாருக்கும் பிடிப்பதில்லை.
இருந்தாலும் எழுதுகிறேன்,
எனக்குப் பிடித்திருப்பதால்.

எதைச் சொல்லுவேன்?

முத்தத்தின் முடிவிலிகளாய்
நாம் மூச்சிழந்து
ஒருவருக்குள் ஒருவரைத் துழாவித் தேடிக்
களைத்த (களைக்காத?) காலத்தைச் சொல்லலாம்.
அல்லது சொல்லலாம் தான்
சுற்றியிருந்த இயற்கைக்கு வலிக்கும்படி
மெளனத்தின் அடர்த்திக்கு
அகராதி எழுதிக் கொண்டிருந்த
நம் பார்வைகளின் கதையை.

ஒருவேளை
மாலை நேரத்துப் பூங்காவில்
இலையுதிர்காலத்து நிலத்தின் மீதாக
நடந்து செல்லும் காலணி ஒவ்வொன்றும்
உன் பேர் சொல்லிச் சென்ற நிகழ்வின் மேல்
இவர்கள் ஆர்வம் காட்டக் கூடுமோ?

இல்லை, நான் நினைக்கிறேன்,
உன் தலை துவங்கி ஒவ்வொரு பாகமாய்ப்
பாதம் வரை
உவமைகள், உவமேயங்கள் இட்டு நிரப்பி
காப்பியச் சுவையுடன்
வர்ணித்தால் தான் இவர்களுக்கு ஈடுபாடு என்று,
சொல்லி விடட்டுமா?

வேறு என்ன தான் சொல்ல,
கடல் நடுவே ஒரு தீவில்
பல யுகங்களாய்க் காத்திருந்து
ஒரு நாள்
காலை நேர ஈரக் கனவுகளுடன் நான்
கண்விழித்தபோது
கடல் கன்னியாய் நீ வந்து சேர்ந்ததையா?

அடடா, மறந்தே போனேன்,
என் இதயத்தில் தளையிட்டுக் கட்டி
என் உடல், பொருள், ஆவி
அனைத்தையும் சிறைப்பிடித்து
நீ எனக்கு விடுதலை அளித்த அனுபவத்தையும்
சொல்லலாம் இவர்களிடம், ஆம்.

ஆனாலும்,
இப்போது என்னால் சொல்ல முடிந்ததெல்லாம்
திடீரென்று என்னைச் சூழ்ந்து
எனக்குள் நுழைந்து வழிந்து நிறைந்து
நான் என்னைத் தொலைத்த
அந்தப் பிரிவென்னும் பேரிருள்,
அதைப் பற்றி மட்டும் தான்.

இவர்கள்
புரிந்து கொள்வார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X