பெண்மையெனும் மாயை....!
ஆதியிலேயே தொலைத்திருக்க வேண்டும்
இந்த பெண்மையெனும் மாயையை....
எதிரிகள் யாரென்றறியா கணமொன்றில்
நான் புகுந்தகம் போக நேரிட்டது
நலங்கிட்டகால் நடுங்க-ஆசையும்
எதிர்பார்ப்புமாய் நுழைந்தேன்
மலர்ந்த முகமாய் மாமியார்
முகமே மதச்சின்னமாய் மாறிய மாமனார்
கேலியும் குறுநகை பார்வையுமாய்
மைத்துனர்கள்
தோழமையாய் மைத்துனி
வயிராற உணவு களைப்பார நித்திரை
சந்தோஷ இரவுகள்
கழிந்தது ஆட்டத்தின் முதல்சுற்று
கட்டிலிலேயே காப்பி வேண்டும் கணவன்
பள்ளிபோக தயாராக வேண்டிய குழந்தை
பூஜை பாத்திரம் கேட்கும் மாமனார்.
கல்லூரி போக தலைபின்னிவிடச் சொல்லும்
மைத்துனி
இடையிடையே அடுக்களையுள்ளிருந்து
அழைக்கும் மாமியார்
பட்ஜெட்டுக்குள் குடும்பம்
மாதமொரு சினிமா
ஹோட்டல் உணவு
சொந்தமாய் வீடு
கொஞ்சம் கடன் நிறைய அன்புமாய்
கழிந்தது ஆட்டத்தின் இரண்டாம் சுற்று
எப்போதும் ஊடல்
எப்போதேனும் கூடல்
அதேபோல் வைக்கும் குழம்பில்
அரையுப்பு அதிகமென
குறைகூறும் கணவன்
மாமியார் மாமனார் மருத்துவச் செலவுக்கென
ஒதுக்கப்பட்ட என் மாத சம்பளங்கள்
இப்படி ஆதியிலிருந்தே தொடரும்
பெண் நாகரிகம்
கொஞ்சமும் மாறாமல்
மகளாய், தங்கையாய், தாயாய்
மருமகளாய், மாமியாராய், மனைவியாய்.....
தொடருமிச் சங்கிலியில்
நான்காம் சுற்றில் நான்
முதல் சுற்றில் என் மருமகள்...
ஆதிக்கம் செய்யவே
பிறப்பெடுக்கும்
ஆண்கள்
அடிமையாகவே வாழப்பழகிய
பெண்கள்
கொஞ்சம் தைரியமும்
நெஞ்சில் வீர்யமுமிருந்தால்
சொல்லுங்கள் உரக்க
"மாதர்தம்மை இழிவு செய்யும்
மடமைதனையும் முடிந்தால்
அம்மடையர்களையும் கொளுத்துவோம்"












Click it and Unblock the Notifications