மரணப் பேச்சுகள்
வருக வருக..
என் மடியில் வீழும்
உயிர்ப்பறவையே!
மரண கந்தத்தை
அழுகும் பற்களினிடையே
அனுப்பிவைத்து
உன் சுவாசங்களில்
நிரப்பியது
நான்தான்
மரணசாசனத்தை நகங்களால்
உடல்களில் நான் எழுதும்போது
நாளைய காகிதங்கள் ஏன்
அலறுகின்றனவென அறிவதில்லை நான்.
விளையாட்டு வீரனே!
என் தோட்டத்தினூடே தெரியும்
தடகள அரங்கத்தில்
உற்றுப்பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன்.
கைகால்கள் குறுக்கிய உனது ஓட்டங்களின்
ஆயத்தங்களில் தொடங்கி,
நிணநீரில் நீந்தி, கயிற்றை தொப்புளில்
இறுக்கியபடி நீ வெளிவந்த நாள் முதல்...
உன் ஓட்டங்களை
கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
பிறரின் முந்துதல்களில் படபடத்து,
வெறியேறி, எவரெவரோ அறிவுறுத்த,
ஏதேதோ வட்டப்பாதைகளில் வளைந்து வளைந்தோடி,
தோல்வியும், வெற்றியும் இல்லாது
பாசக்கயிறு அறுத்து வீழ்ந்ததும்
ஓடுபவரும், பார்ப்பவரும் அழுது ஆர்ப்பரிக்க,
இவ்விபரீத பந்தயத்தை காலத்தின் முதல் நொடிதொட்டு
நடத்திக்கொண்டுதானிருக்கிறேன்.
உன் வியர்வையை சிதையிலேயே உலர்த்திவிட்டு
இழைக்கும் சுவாசங்களை அந்நாசியிலேயே அடைத்துவிட்டு
வாசனைகளை தெற்குத்திக்கில் அனுப்பிவிட்டு,
என் மடியில் புகல்வாய்.
மீண்டும் ஓடச் செல்லலாம் நீ
சுவாசப்படுத்திக்கொண்டானபின்..
அலுக்கவில்லை எனக்கு இன்றும்.
எப்படி ஓடுவதில்
உனக்கு அலுக்கவில்லையோ
அதேபோலவே.












Click it and Unblock the Notifications