மீண்டும் நீ வருவாயா பாரதி?
ஒளிபடைத்த கண்னும் உறுதி கொண்ட நெஞ்சும்
மீட்டுக் கொஞ்சம் தந்திட மீண்டும் நீ வருவாயா பாரதி?
உன் பாட்டுத் திறத்தாலே எம்மைப் பாலித்திட
மீண்டும் நீ வருவாயா பாரதி?
"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்ற உன்
சேதுக் கனவுகள் சேதாரமாய் கேள்விக்குறியாய் கேலிக்குரியதாய்க்
காலத்தின் பதிலுக்காய்க் காத்துக் கிடக்கிறது.
காவிரி, முல்லை, பாலாறு கூட்டணிச் சதியில்
முமுனைப் போரில் முடங்கிக் கிடக்கும்
நம் தமிழ் நாட்டு விவசாயம்.
இங்கு நதிகள் அல்ல
வறட்சி மட்டுமே வற்றாமல் பாய்கிறது.
யாமறிந்த மொழிகளிலே
தமிழை மட்டும் காணவே காணோம்.
தமிங்கலம் என்ற திமிங்கலம்
வாய் பிளந்து சிரித்திருக்க
எங்கும் எதிலும் தமில்,டமில்,டேமில்..
புதுமைப் பெண்கள்
கொஞ்சம் சாதனை மிச்சம் வேதனை
ஒரு சுனிதா வில்லியம்ஸ் உருவாகும் நேரம்
ஓராயிரம் சுப்பம்மாக்களும் அல்லவா உருவாகின்றனர்?
முப்பத்து மூன்று விழுக்காடு என்று
மூன்று தலைமுறையாய்ச் சொல்கிறார்கள்
இன்னும் முப்பத்து மூன்று வருடங்களாவது
இதைச் சொல்ல மட்டுமே செய்வார்கள்.
விளையாடும் பாப்பாக்கள் ஓடுவதற்கு
ஏது இடம்? ஏது நேரம்?
நான்கு சுவற்றுக்குள் கணினியுடன் தனிமையுடன்..
இல்லையேல் பட்டாசுடன், பட்டினியுடன்.
சிவகாசி சிறுவனின் பேரனாவது
பள்ளி காண்பானா?
இல்லை தாத்தா பட்ட
கடனுக்காகத் தற்குறியாய் நிற்பானா?
உன் காணி நிலக் கனவுகள்
கோணிக்குள் பதுங்கிட
உணவுக்கும் உடைக்குமே பஞ்சமோ பஞ்சம்...
சாதிகள் இல்லையடி பாப்பா!
இன்று சாதிகள்
கொஞ்சம் நஞ்சம் இல்லையடி பாப்பா!
வஞ்சகம் இல்லாமல்
பல்கிப் பெருகிய கிளைகளடி பாப்பா!
வெந்து தணிகின்றன சேரிக் குடிசைகள்
வெடித்து மடிகின்றன
கொத்துக் கொத்தாய் உயிர்கள்
தீராத விளையாட்டு
தீப்போல் பரவும் தீவிரவாத விளையாட்டு!
அச்சம் அச்சம் அது எங்குதான் இல்லை?
எதில்தான் இல்லை?
மீசைக் கவிஞனே!
உன் வானவில் கனவுகள் வண்ணம் பெறும் காலம்
கூடிவரவில்லை இன்னும்.
கோடித்துயரிலும் நாடி தளர்ந்திடாமல்
நம்பிக்கை மட்டும் வாழ்கிறது இன்னும்.
ஒளிபடைத்த கண்னும் உறுதி கொண்ட நெஞ்சும்
மீட்டுக் கொஞ்சம் தந்திட
மீண்டும் நீ வருவாயா பாரதி?
உன் பாட்டுத் திறத்தாலே எம்மைப் பாலித்திட
மீண்டும் நீ வருவாயா பாரதி?
அன்புடன்,
மலர்