For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆதவனாகிய நான் ....

By Staff
Google Oneindia Tamil News

யுகம் யுகமாய் ......
எரிந்து கொண்டேயிருக்கின்றேன்

வெளிச்சத்தின் இருட்டில்
வேஷம் போடுமிந்த மானிடர் மந்தை
கண்கேட்டுப் போயினும் ஏனிந்த .....
சூரியநமஸ்காரம் எனக்கு

மேகத்தைக் கலைத்துக் கலைத்து
களைத்துப் போயே, மனிதன் மீது வெறுப்புக் கொண்டே
அந்தியில் நானும் அசந்து போய்
ஆழியில் விழுவேன்......

ஆயினும் ஏனோ
மலர்களின் ஏக்கம், இயற்கையின் வாட்டம்
என்னையும் மாற்றும், உள்ளம் உருகி மீண்டும்
கிழக்கிலிருந்து புதிதாய் முளைப்பேன்....

விழுவதும் எழுவதும் ஆதவன் எனக்கு
வாழ்க்கையின் கணக்கு
இடையினில் நடக்கும் நாடகம் அனைத்தும்
இதயத்தில் பதிக்கும் தடங்கள் வலிக்கும்

இருட்டினைத் துரத்தி உலகிற்கு
வெளிச்சத்தைக் கொடுப்பேன் .....
ஆனால் மனிதன் மட்டும் ....
இதயத்தில் உறைந்த இருளில்
இறுதிவரை அமிழ்ந்தே சாகிறான் .....

கிடைப்பதைச் சுருட்டி வறுமையைப் பெருக்கி
தன்னலச் சேற்றினுள் தானும் புதைந்து
தன்கையைக் கொண்டு தன் கண்ணைக் குத்தி
காட்சி தெரியவில்லையென்று ஏன் தான்
வீண் கோஷமிடுகின்றான்

யுகம் ... யுகமாய் .... நானும்
எரிந்து கொண்டேயிருக்கின்றேன்
ஓருண்மை உனக்கு எடுத்துச் சொல்வேன்
உலகத்தின் இருப்பை உனதாய் எடுத்து
இயற்கையைக் கற்பழித்து நீ மட்டும் வாழ்ந்தால் ....

அதோ என்மீது காதல் கொண்டு
தன்னைக் குடித்துவிடக் கேட்கும் அந்தப்பனித்துளி .....
அதைக் கொண்டே ......................
என்னை அணைத்துக் கொள்ளச் சொல்வேன்...

அப்போது ...........................

உலகம் இருண்டு விடும்
உனக்கு விளங்கிவிடும்..... ஆம் மனிதா
இந்த உலகம் உனக்கு மட்டும்
சொந்தமானதல்ல .....
ஆதவனாகிய நானும் எப்போதும்
அழியாமல் இருக்க மாட்டேன்...

ஏனென்றால் ..... நான்
யுகம் யுகமாய் எரிந்து கொண்டே ................

-சக்தி சக்திதாசன் [email protected]

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X