மழை தரும் பாடங்களோ..?
உயிர்களுக்கு உயிரளிக்கும் அமுதநீர் - அதன்
உயர்வினை அறியாத உயிர்களும்தான் உண்டோ?
புனிதமான மழை நீர் போலே
மனிதன் கற்கக்கூடிய பாடம்தான் உளதோ?
பள்ளம் நோக்கி ஓடியே - மனதை உயர்விலும்
கீழ்நிலையிலே வைக்க சொல்கிறதோ?
கண்ணாடி போலிருந்து கொண்டு - மனதையும்
அப்படியே வைக்க சொல்கிறதோ?
பலவிடங்களில் ஆவித்துளிகள் சேகரித்தல்போல்
அறிவினை சேகரிக்க செயலில்தான் விளக்குகிறதோ?
சிறுதுளிகள் சேர்ந்து வெள்ளமாகுவதைக் காட்டியே
நம்மையும் சேமிக்க சொல்கிறதோ?
கருமேகங்கள் அதிகமானால் கொட்டிவிடுதல் போல்
மன அழுத்தத்தையும் கொட்டி விட சொல்கிறதோ?
பருவம் தவறி பெய்திட்டால் பயிருக்கு பயனில்லை என்று காட்டியே
காலத்தே அனைத்தும் செய்திடல் வேண்டும் என்று அறிவுறுத்துகிறதோ?
தான் விழும் இடமெல்லாம் தண்மை படுத்துதல் போலவே
நாம் இருக்கும் இடமெல்லாம் இனிமைப்படுத்த சொல்கிறதோ?
அழுக்கு, மாசுகள் அதிகம் சேர்ந்தால் உபயோகப்படாததைக்காட்டியே
கெட்ட விஷயங்களில் இருந்து விலகியிருக்க சொல்கிறதோ?
ஓரிடத்திலிருந்து பயணிக்கும் மேகங்கள் வேறிடத்தில் கொட்டுதல் போல்
பெண்ணையும் புகுந்த வீட்டில் அமுதமாய் இருக்க சொல்கிறதோ?
சிறுமேகங்கள் ஒன்று சேர்ந்து பலம் கொண்ட மழைமேகமாய் மாறுதல் போல
ஒற்றுமையாய் பலம் கொள்ளவும் சொல்கிறதோ?
வியர்வை, கழிவு, சாக்கடையிலிருந்தும் வெப்பத்தால் விடுபட்டு புனித நீராய் மாறுதல் போல்
கெட்ட எண்ணங்களிலிருந்து ஆன்மாவை விடுவித்துக்கொள்ள சொல்கிறதோ?
எங்கிருந்து வந்தது என்மேல் விழுந்த மழைத்துளி என பாராதது போலவே
நமக்கு கிடைக்கும் நல் அறிவினையை யார் மூலமும் கற்றிடிடலாம் என காட்டிடுதோ?
தனக்குத்தானே புத்துயிர் ஊட்டியே மற்றோரிடம் அழுக்கைப்போக்கி தூய்மை படுத்துதல் போல்
நமக்கு நாமே புத்துயிரூட்டியே மற்றவர் மனதையும் அமுதாக்க சொல்கிறதோ?
இன்னும் எத்தனையெத்தனை பாடங்களோ...நாம் கற்க...
மழை நீர் போலவே நாமும் இருக்க.....
ஆகர்ஷிணி என்கிற சுபாஷினி ஜெயராமன்