கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருக்கிறோம்..!
சென்னை: என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. இது சினிமா பாட்டாக மட்டுமே நம்மால் பார்க்கப்பட்டு பார்க்கப்பட்டு இன்று வரை நாம் நமது சுயத்தை கண்டு கொள்ளாமலேயே இருந்து பழகி விட்டோம்.
காவிரி உள்ளிட்ட எத்தனை பிரச்சினைகள்.. குற்றம்சாட்டி கை விரல்களையும், முஷ்டியையும் உயர்த்தி குறை கூறும் நாம்.. என்ன செய்தோம் இருந்ததை பாதுகாக்க.. இதுதான் எல்லோரும் இப்போது எழுப்பி வரும் கேள்வியாக மாறியுள்ளது.
நமது வாசகர் காந்திமதி பழனிச்சாமி இதுதொடர்பாக நமக்கு அனுப்பியுள்ள உணர்வுப் பகிர்வு:
நீரின்றி அமையாது உலகு!
நீரும் சோறும் இல்லாமல் வாழ முடியுமா?
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருக்கிறோம்.
நீர் ஆதாரங்கள் அனைத்தையும் நாமே அழித்து விட்டோம்.
மரங்களை அழித்து விட்டோம்.
மண்ணை அள்ளி நீர் படுகைகளை சுரண்டி விட்டோம்
ஏரி குளங்களை அழித்து மழை நீரை சேமிக்க முடியாமல் செய்து விட்டோம்.
நீரில்லாத நிலையால் சோறில்லாமல் போக போகிறது.
இந்த நிலையை கொண்டு வந்தது யார்?
வேறு யாரும் அல்ல நாம் தான்.
எது நடந்தாலும் நமக்கென்ன என்று ஒரிரு தலைமுறை
வாழ்ந்தது தான் காரணம்.
இனி வர போகும் தலைமுறை தழைக்க முடியாமல் போக
நாம் தான் காரணம் ஆகி விட்டோம்.
நாடு ஆண்டவர்களை ஆண்டவனை போல் எண்ணியது நம் குற்றம்.
அவர்களும் ஆண்டவனை போல் தான் நடந்து கொண்டுள்ளார்கள்.
ஆத்தல் / அழித்தல் / காத்தல் - இது தான் கடவுள் பணி.
ஆம் - அழித்தல் பணியை மட்டும் செய்கிறார்கள்
நம் குடும்பம் நம் குழந்தை நலமாய் இருந்தால்
போதுமென்று நாட்டை பேணாமல் இருந்து விட்டோம்.
நாட்டை காக்க தலைமை இருக்கிறது என்று நம்பி விட்டோம்.
வேலியே பயிரை மேய்ந்ததை பார்த்தும்
சோம்பி இருந்து விட்டோம்.
திருந்துவார்கள் என்று நம்பி திரும்ப திரும்ப
வாய்ப்பளித்து / வாக்களித்து வளங்களை
கொள்ளையடிக்க விட்டு விட்டோம்.
நம்பிக்கை துரோகம் செய்தவர்களை
மன்னித்து விட்டு விட்டோம்.
மன்னித்தல் கூட எவ்வளவு தவறு என்பது
இப்போது புரிகிறது.
அரசியல்வாதிகள் அடித்த கொள்ளையை
வேடிக்கை பார்த்ததன் விளைவு
தட்டி கேட்காமல் போனதன் விளைவு
விளை நிலங்கள் வீண் ஆனது.
வாழ்வா / சாவா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இனி நாம் கொள்ள வேண்டியது துணிவு.
காசுக்காக எதையும் செய்ய துணிந்தவர்களை
துணிவுடன் எதிர்க்க வேண்டும்.
அழிக்கவரும் சக்திகள் அரசியல் / சட்டம் / காவல்
எதை கண்டும் அஞ்ச கூடாது.
துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை.
துணிந்தபின் துயரம் கொள்ள கூடாது.
நாட்டையும் / மக்களையும் / வளங்களையும்
காப்பாற்றவே சட்டமும் / அரசாங்கமும்.
முதலுக்கே மோசம் எனில் ஏந்த தடையையும்
உடைக்க தயங்க கூடாது.
சிங்கமென பாய வேண்டும்.
இவர்கள் இனி மக்களை கண்டு குறிப்பாக
தமிழனை கண்டால் நடுங்க வேண்டும்.
அரசியல் வாதிகள் அரசியலை விட்டே
ஓட வேண்டும். சாது மிரண்டால் காடு
கொள்ளாது என்பதை நிருபிக்க வேண்டும்
நமக்கு சேவை செய்ய நாம் பனித்த
ஏவலர்கள் (வேலையாட்கள்) ஆட்சியில் இருக்கும்
அரசியல் வாதிகள் என்பதை உணர வேண்டும்.
கொள்ளையர்களுக்கு இவ்வளவு
துணிவிருந்தால் கொள்கையாளனுக்கு எவ்வளவு
துணிவிருக்கும் என காட்ட வேண்டும்.
தனி மரம் தோப்பாகாது. பாதிக்கபட்டவன் மட்டும்
போராடினால் பலனிருக்காது.
அவனுக்கு பலமும் இருக்காது.
விவசாயிக்கு பலமாய் நாம் இருப்போம்.
குரல் கொடுப்போம். தோள் கொடுப்போம்.
சோறு போட்டவன் நெஞ்சை கூறு
போட நினைபவரை வேரறுப்போம்.
- காந்திமதி பழனிச்சாமி