நான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ரசிகன் அல்ல... ஆனால்!
நான் எஸ்.பி.பி.க்குதான் என்று இல்லை.. எந்த ஒரு திரைக்கலைஞருக்கும் எப்போதும் ரசிகராக இருந்தது இல்லை!
நினைவு தெரிய தொடங்கிய காலங்களில் எங்கும் நடைபயணம்தான்.. சாலைகளில் செல்லும் வழிகளில் கடைகளில் கேட்டிருக்கிறேன் பாடலை பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம்- சித்ரா என்கிற ஒலிகள்.
கேசட்டுகள் வந்த காலத்தில் ஒலிச்சித்திரங்களாக விதி போன்ற படங்களை கேசட் தேய தேய கேட்டிருக்கிறேன்.. பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு கேட்டு வீதிகளை அலறவிட்டிருக்கிறேன்.
பதின்ம வயதுகளில் பருவமும் அதன் வினைகளும் வந்து சேர்ந்த போது பாடல்களை முணுமுணுக்கத் தொடங்கினேன்.. அந்த பாடல்களை இன்னார் பாடிய பாடல்கள் என்றெல்லாம் பகுப்பாய்வு செய்து கேட்டது இல்லை.
அந்த பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் ஒரு ஆன்ம திருப்தி இருந்தது. இப்படியோ எத்தனையோ பாடல்கள் என்னுள் என்னுள் மெதுமெதுவாய் குடியேறிக் கொண்டன.
தனிமைநாட்களில் மழைநாட்களில் உரக்கப் பாடி ஆறுதலடைந்து கொள்வேன்.... சில பொழுதுகளில் ஒரே ஒரு பாடலை திரும்ப திரும்ப பாடி தேற்றிக் கொள்வேன். காலத்தின் ஓட்டத்தில் தனியனாய் நான் நின்று திரும்பிப் பார்க்கையில் பல புரிதல்கள் என்னுள் வந்தது.
அப்போதுதான் நான் தேசியகீதம் போல முணங்கிய அந்த பாடல்களின் குரல்கள் எஸ்.பி.பி, ஜேசுதாஸ் எனும் இரு மகான்களுக்கு சொந்தமானது என தெரியவந்தது.
அதுவும்
மலையோரம் வீசும் காற்றே..
தேனே தென்பாண்டி,
நான் பாடும் மெளனராகம்,
வானுயர்ந்த சோலையிலேயே,
மணியோசை கேட்டு,
நிலவு தூங்கும் நேரம்,
இதயம் ஒரு கோவில்,
கூட்டத்திலே கோயில் புறா,
சங்கீத மேகம் என நீளும் இந்த பட்டியல்...
என்னை ஆற்றுப்படுத்திய,
தேறுதல் தந்த,
தாய்மடியாய் இருந்த,
மனசை சாந்தப்படுத்திய
இதுபோன்ற எண்ணற்ற பாடல்களை பாடிய பெருமகனார் பேராளுமையாளர் எஸ்.பி.பி.தான்!
ஆம்
என்னை அறியாமலேயே
என்னுள் ஒரு அங்கமாக
என்னிடம் சொல்லாமலேயே
என்னுள் ஒரு உணர்வாக
ஒன்றிக் கலந்து இருந்தார் எஸ்.பி.பி என்பது மிகை சொல் அல்ல.
அதனால் நான் அவரது ரசிகன் அல்ல! அதனால்தான் அவர் என்னுள் ஒருவர்!
இப்படித்தான் இந்த மண்ணின் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் அவர்களை அறியாமேலேயே தன் வசீகர குரலால் வசப்படுத்தி வைத்திருந்தவர் இந்த பாடும் நிலா பாலு!
இதனால்தான் ஒவ்வொருவரது உள்ளத்திலும் ஆழச் சோகம் குடிகொண்டிருக்கிறது!
இதனால்தான் எஸ்.பி.பி.யின் இறுதி நிமிடங்கள் அந்த மனங்களை இனம்புரியாமலேயே இறுகச் செய்து கொண்டிருக்கிறது!
அனேகமாக என்னைப் போல்தான் எஸ்.பி.பி. எனும் மகா கலைஞனுக்கு கோடானு கோடி தமிழ்மண்ணின் கிராமத்து இளைஞர்கள் இதய அஞ்சலியை செலுத்திக் கொண்டிருப்பார்கள்!
இப்போதும்கூட...
எஸ்.பி.பி.யின் பிரிவுக்கான ஆறுதலைக் கூட அவரது பாடல்களில்தான் குரல்களில்தான் தேடித் தேம்ப முடிகிறது...
ஆம்
விம்மும் குரல்களினூடே வாய் தானாக அசைகிறது
வானம் தொட்டுப் போனா.....................
மானமுள்ள சாமீ......
தேம்புதய்யா பாவம்!