திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் பங்குனி 1ல் ஆழித்தேரோட்டம்... இவ்வளவு பிரம்மாண்டமா
திருவாரூரில் பங்குனி 1ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் கோவில் நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகின்றன.
திருவாரூர்:
திருவாரூரில் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்ச் 15ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. பிரம்மாண்ட ஆழித்தேர் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. உயர்ரக மரங்களால் 36 அடி உயரத்தில் நிலையாக அமைக்கப்பட்டுள்ள 5 அடுக்குகளை கொண்ட பீடத்தின் மீது மூங்கில் மற்றும் பனமர துண்டுகளை கொண்டு தேர் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சைவ சமய மரபில் பெரியகோவில் என்று அழைக்கப்படுவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். இக்கோவிலில் ஆழித்தேர் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இத்தேர் விளங்குகிறது. மக்கள் கடலில் உருண்டு வரும் பெரிய தேர் என்பதால் மக்கள் இத்தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர். ஆரூரா...தியாகேசா என்று பக்தர்கள் முழக்கமிட பிரம்மாண்டமான தேர் ஆடி அசைந்து வருவதைக் காண கண்கோடி வேண்டும்.
ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

பிறந்தால் முக்கி தரும் தலம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது. திருவாரூர் நகரமும் ஆலயமும் சிவபெருமானின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது என்கின்றன புராணங்கள். ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.
இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது.

நவகிரகங்கள் வழிபடும் தலம்
நளனும் சனியும் வழிபட்ட தலம் இது. தியாகேசர் சந்நிதியில், மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்! பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கும். சந்தனத்தின் மீது குங்குமப் பூவையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து, உத்ஸவ வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.

தியாகேசரின் பாத தரிசனம்
தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். வருடத்தில் இரண்டு முறை மட்டுமே எம்பெருமான் தியாகேசரது திருப்பாதம் இந்த உலக மக்களுக்கு காட்சியளிக்கும். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திரத்தன்று நிகழும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தியாகேசரின் இடது பாதம் மார்கழி திருவாதிரை பதஞ்சலி முனிவர்க்கு காட்சி கொடுத்தார். வலது பாதம் பங்குனி உத்திர நாளில் வியாக்ரபாதருக்கு காட்சி கொடுத்ததாக புராண கதைகள் கூறுகின்றன.

ஆழித்தேரோட்டம்
இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது திருவாரூர் தேர். ஆழி என்றால் மிகப்பெரியது என்று பொருளாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

450 டன் எடை கொண்ட தேர்
இந்த தேர் 36 அடி உயரத்தில் 5 அடுக்கு கட்டுமானங்களை கொண்ட தேர் பீடத்தில், 60 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு ஆக கூடுதல் 96 அடி உயரத்தில் சுமார் 450 டன் எடையில் தேர் கம்பீரமாக அசைந்து வருவதை பார்க்க நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த தேர் சிம்மாசனம், பத்மாசனம் என 5 வகை ஆசனங்களை கொண்டு 5 அடுக்குகளாக 36 அடி உயரத்தில் அழகிய தேராக கட்டப்பட்டுள்ளது. இதன்மேல் 60 அடி உயரத்தில் மூங்கில் மற்றும் பனைமர துண்டுகளை கொண்டு கோபுர வேலைப்பாடுகளும், அதனை தொடர்ந்து வண்ண துணிகளை கொண்டு அலங்கரம் செய்யப்பட்டு 96 அடி உயரத்தில் 450 டன் எடையுடன் கூடிய தேர் அசைந்து வருவது பார்ப்பவர் கண்களுக்கு பரவசம் தரும். குறிப்பாக வீதி முனைகளில் தேர் திரும்பும் அழகு காணக் கிடைக்காதது.

பங்குனி உத்திர தேரோட்டம்
ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின்போது இறுதி நிகழ்ச்சியாக இத்தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு 15.3.22 ஆம் நாள் பங்குனி 1ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் கோவில் நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகின்றன. தேரோட்டத்தினை முன்னிட்டு தேர் கட்டுமானப் பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. உயர்ரக மரங்களால் 36 அடி உயரத்தில் நிலையாக அமைக்கப்பட்டுள்ள 5 அடுக்குகளை கொண்ட பீடத்தின் மீது மூங்கில் மற்றும் பனைமர துண்டுகளை கொண்டு தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தியாகராஜர் புறப்பாடு
இதற்காக வேதாரண்யம் உள்ளிட்ட காடுகளில் இருந்து மூங்கில் மரங்கள் கொண்டு வரப்பட்டு கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானம் முடிந்தவுடன் அழகிய வண்ணங்களால் ஆன திரைசீலைகள் கொண்டு தேர் அலங்கரிக்கப்படும். அலங்கார வேலைகள் முடிந்தவுடன் தேரோட்டத்திற்கு 3 நாட்கள் முன்னதாக கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருள்வார். தியாகராஜர் தேருக்கு வந்தவுடன் பக்தர்கள் திரளாக வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு செல்வர்.












Click it and Unblock the Notifications