சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஆனி திருமஞ்சனம் திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
சிதம்பரம்: ஆடல்வல்லான் நடராஜருக்கு நாளை ஆனி திருமஞ்சனம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று சிதம்பரத்தில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.
ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள். திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருமஞ்சனம் என்றே அழைக்கப்படுகிறது. சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. நடராஜர் ஆலயத்தில் நிகழும் ஆனி திருமஞ்சனம் நிகழ்வையும் தேரோட்டத்தையும் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.
சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரை விழா 11ல் கொடியேற்றம் - 19ல் திருத்தேரோட்டம், 21ல் ஆருத்ரா தரிசனம்
நடராஜர் அபிஷேகம்
ஸ்ரீநடராஜருக்கு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நன்னாளே ஆனித் திருமஞ்சனத் திருவிழா!
ஆனி திருமஞ்சனம்
பங்குனியைப் போலவே ஆனியில் வரும் உத்திரமும் விசேஷம். இந்த ஆனி உத்திரமே, ஆடல்வல்லானுக்கான விழாவாக, ஆனித் திருமஞ்சன வைபவமாகப் போற்றப்படுகிறது. சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழா, பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். வைகாசியில் அக்கினி நட்சத்திர தருணம் எல்லாம் முடிந்து, வெப்பத்தில் தகிக்கும் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
நடராஜர் தாண்டவம்
ஆண்டாண்டு காலமாக, ஆனியில் நடைபெறும் திருமஞ்சனத் திருவிழாவைத் துவக்கி வைத்தவர் யார் தெரியுமா. யோக சூத்திரத்தை நமக்கு அருளிய பதஞ்சலி மகரிஷி. சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் உணர்த்துகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. இதேபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் கொண்டது. இந்த இரண்டு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் தரிசிப்பதாக ஐதீகம்.
ஆனி திருமஞ்சனம் கொடியேற்றம்
இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1ஆம்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.
ஆனி திருமஞ்சன தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் வலம் வருவார்கள். சிகர நிகழ்ச்சியான திருமஞ்சன விழா நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
ஆனி திருமஞ்சன தரிசனம்
ஸ்ரீநடராஜரையும், அன்னை ஸ்ரீசிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அங்கே அவருக்கு திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகங்கள் நடைபெறும். பிறகு இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சியைத் தரிசிப்பார்கள் பக்தர்கள். ஆனந்த நடனம் ஆடியபடியே, சித்சபையில் எழுந்தருள்வார்கள். இதைக் காணக் கண்கோடி வேண்டும். நடராஜருக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும் கிடைப்பதாகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்றும் ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், வளமும் கூடும் என்றும் கருதப்படுகிறது.