கொரோனா லாக்டவுன் : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை - ஆட்சியர் உத்தரவு
கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இன்றைய தினம் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களிலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மாலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று அதிகாலை 3.10 மணிக்கு தொடங்கி இன்று நள்ளிரவு 12.55 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் பக்தர்கள் பங்கேற்பு இன்றி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தற்போது கொரோனா லாக்டவுன் தளர்வுகளுடன் அமலில் உள்ளதால் இதன் காரணமாக இந்த மாத பவுர்ணமிக்கும் திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications