ஆண்டாள் சூடிய மாலை அணிந்து கள்ளழகர் வைகையில கால் பதிக்கும் நேரத்திலே...
உலகப் பிரசித்தி பெற்ற அழகர்கோவில் சித்திரை பெருந்திருவிழா இந்த ஆண்டும் அரசு வழிகாட்டுதல்படி கோவில் வளாகத்திலேயே நடைபெறுகிறது.
மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கள்ளழகர் வைகை ஆற்றில் கால் பதிக்கப் போகிறார். நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும் ஆன்லைனில் தரிசனம் செய்து கோவிந்தா கோவிந்தா என பய பக்தியோ முழக்கமிடலாம்.
Recommended Video
சித்ரா பவுர்ணமி நாளில் மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுவார். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கோவில் வளாகத்திலேயே திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளிக்கிழமை மாலையில் கோவில் வளாகத்தில் திருவிழா தொடங்கியது. அன்று கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி புறப்பாடாகி அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். இதைதொடர்ந்து 24, 25ஆம் தேதிகளிலும் கோவில் வளாகத்திலேயே ஆகம விதிப்படி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடந்தது.
சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து சித்ரகுப்தனை வணங்கினால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும்
அழகா கள்ளழகா
சுந்தர தோளுடைய அழகன், குடியிருக்கும் மலை திருமாலிருஞ்சோலை. மலை அழகா ! இல்லை பெருமாள் அழகா ! என வியக்கும் வண்ணம் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட முடியாத அழகுடையது. ஆண்டுதோறும் மலைமேல் வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக மனமிறங்கி இறைவனே மக்களை காண வரும் நாள் சித்ரா பவுர்ணமி. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கள்ளழகர் வர முடியாமல் போய் விட்டது.
கண்டாங்கி புடவையில் கள்ளழகர்
இன்று காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் எதிர் சேவையும், கள்ளர் திருக்கோல நிகழ்ச்சியும் நடைபெற்றது. கண்டாங்கி புடவைக் கட்டி கையில் வேல் கம்புடன் காட்சி அளித்தார் கள்ளழகர். நேரில் அழகரை எதிர்கொண்டு அழைக்க லட்சக்கணக்கானோர் கூடுவார்கள். ஆன்லைனில் பக்தர்கள் எதிர்சேவையை தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகத்தில் வைகை ஆறு
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. இதற்காக கோவில் ஆடி வீதி நந்தவனத்தில் மாதிரி வைகை ஆறு அமைக்கப்பட்டுள்ளது. தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு ஆண்டாள் மாலை சாற்றப்படும்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
கள்ளழகர் வைகையில் இறங்கும் முன்பாக அணிவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து சூடிக்கொடுத்த மாலை, பட்டு வஸ்திரங்கள், கிளி மங்கலப்பொருட்கள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஆண்டாள் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மலையை அணிந்து கொண்டுதான் கள்ளழகர் வைகையில் இறங்குவார். பின்னர் ஆடி வீதியில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
மோட்சம் அளிக்கும் பெருமாள்
28ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்பாடும், 29ஆம் தேதி காலை 10 மணிக்கு கருட சேவை, மண்டூக மகரிஷிசிக்கு மோட்சம் அளித்தல், 30ஆம் தேதி காலை 10 மணிக்கு பூப்பல்லக்கு விழாவும், மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு அர்த்தமண்டப சேவையும், 2ஆம் தேதி காலை 10 மணிக்கு உற்சவ சாந்தி, திருமஞ்சனமும் நடைபெறும். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.