குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கோலாகல கொடியேற்றம்..வேடம் அணிந்த பக்தர்கள்..அக்.5ல் சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது. குலசை, என்று அழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் ஊராட்சி, தமிழகத்தில், தென்கோடி தூத்துக்குடி மாவட்டத்தில், அமைந்து தனிச்சிறப்பு பெற்றது. இங்கு அருள்மிகு ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரர் சமேத அருள்தரும் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயில் பழம்பெருமை வாய்ந்தது. மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக உலக புகழ் பெற்றது குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் பாண்டியர் காலத்திலேயே அமைந்திருந்ததாக வரலாறு கூறுகிறது.
தூத்துக்குடியை ஒட்டியுள்ள கடலில் தாராளமாக கிடைத்த முத்துக்களை எடுத்து, அதை ஆபரணங்களாக்கி, பாண்டிய மன்னர்கள், அன்னைக்கு சூட்டி அழகு பார்த்ததால், அம்பிகை முத்தாரம்மன் (முத்துக்களை ஆரமாக அணிபவள்) என்று பெயர் பெற்றதாகவும், உடலில் ஏற்படும் அம்மை முத்துக்களை, தன்னை வேண்டி வழிபட்டால் உடனே குணமாக்குபவள் என்பதால் முத்தாரம்மன் என்று பெயர் பெற்றதாகவும், இருவேறு வகைகளில் அம்பாளின் பெயர் காரணத்தை கூறுவர். பராசக்தியின் வியர்வை முத்துக்களில் இருந்து உருவான அஷ்டகாளிகளில் மூத்தவள் என்பதால், அம்பிகை, முத்தாரம்மன் என்று பெயரில் அழைக்கப்படுவதாகவும் பக்தர்கள் கூறுவர்.
விஜயதசமி : குலசை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் - குமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை
தசரா பண்டிகை
குலசேகரன்பட்டினம் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதையொட்டி நேற்று காலையில் காளி பூஜை, மதியம் அன்னதானம், மகுட இசை, சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, மாலையில் வில்லிசை நடந்தது. இரவில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.
கொடியேற்றம்
இன்று காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மதியம் முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று காலை முதலே திரளான பக்தர்கள் செவ்வாடை அணிந்து கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
காப்பு கட்டிய பக்தர்கள்
கடலில் புனித நீராடிய பக்தர்கள், தாங்கள் விரதம் இருக்கும் தசராபிறையில் தெளிப்பதற்காக புனிதநீரை எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர். இன்று கொடியேற்றத்தை தொடர்ந்து, பல்வேறு நாட்களாக விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது கைகளில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, விழா நிறைவில் கோவிலில் செலுத்துகின்றனர்.
சூரசம்ஹாரம்
விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10ஆம் திருநாளான வருகிற 5ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மகிஷனை வதம் செய்யும் முத்தாரம்மன்
குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சுமார் 800க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வருகின்றன. சென்னை, மும்பையிலும் கூட குலசை தசரா குழுக்கள் உள்ளன. வேடமணிந்து பணம் வசூலித்து வந்து முத்தாரம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள். முத்தாரம்மன் சிவபெருமானிடம் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக புராண கதை உள்ளது. எனவேதான் சூரசம்ஹரம் நாளில் முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள். மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி வருவது சிறப்பு. தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.