தென்திசைக்கயிலாயங்கள்: கைலாய மலையோடு நேர்கோட்டில் அமைந்துள்ள சிவ ஆலயங்கள்
இமயலையில் உள்ள கைலாய மலை, ஸ்ரீகாளஹஸ்தி, திருச்சி தாயுமானசுவாமி கோயில் மற்றும் இலங்கையின் கோணேஸ்வரர் கோயில் என இந்நான்கும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதாலேயே இவை தட்சிண கைலாயம் என்று அழைக்கப்படுகின்றன.
சென்னை: உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் சைவ வைணவ பேதம் பார்க்காமல், தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது கண்குளிர கண்டு தரிசிக்க விரும்பும் ஒரே இடம் இமயமலையில் உள்ள கைலாசம் தான். மகா சிவராத்திரி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தென்திசை கைலாயங்களைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வோம்.
சிவபெருமான் அன்னை பார்வதி தேவியுடன் வீற்றிருக்கும் அந்தப் புண்ணிய பூமியை எத்தனை இடையூறுகளும், சிரமங்களும் குறுக்கிட்டாலும், கைலாய மலையை தரிசிப்பதே என் வாழ்க்கையின் நோக்கம் என்று நினைப்பவர்கள் எத்தனையோ பேர். அந்த கைலாய மலைக்கு நிகராக போற்றப்படும் தென்திசைக் கைலாயம் என்றழைக்கப்படும் மூன்று கோயில்கள் உள்ளன.

கைலாய மலையை தரிசிக்க நினைத்தாலும், வெகு சிலரால் மட்டுமே அந்த கைலாய மலையை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. பல பேருக்கு அது சாத்தியமில்லாத கனவாகவே உள்ளது. ஆனால், ஆந்திர மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற இராகு-கேது பரிகாரத் தளமான ஸ்ரீகாளஹஸ்தி, தமிழ்நாட்டின் மத்திய பகுதியிலுள்ள திருச்சி மாநகரத்தில் உள்ள தாயுமானவ சுவாமி கோயில் மற்றும் இலங்கையின் திரிகோணமலை சிவன் கோயில் கைலாயத்திற்கு நிகரான ஆலயங்களாக உள்ளன.
ஸ்ரீகாளஹஸ்தி
பஞ்சபூத கோயில்களில் வாயு தலமான ஸ்ரீகாளஹஸ்தி என்றதும், முதலில் நம் நினைவில் வருவது இராகு-கேது பரிகால தலம் என்பது தான். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தேவாரப் பாடல் பெற்ற தலம். மூலவர் பெயர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், அம்மன் ஸ்ரீஞானபிரசுனாம்பிகை. இக்கோயில். நாடு முழுவதும் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் இங்கு வந்து, திருமணத் தடை நீங்கவும், இராகு-கேது தோஷ நிவர்த்திக்காகவும் பரிகார பூஜைகள் செய்து வழிபடுதுண்டு. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாருக்கும் சிவபெருமான் முக்தி அளித்த தலம். ஸ்ரீகாளஹஸ்தி என்பதில், ஸ்ரீ என்பது சிலந்தியையும், காளம் என்றால் பாம்பையும், அத்தி என்பது யானையையும் குறிக்கும். மேலும், சிலந்தி, யானை, மற்றும் பாம்பு ஆகிய ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் மோட்சம் அளித்த தலம். இதற்கு சாட்சியாக காளத்திநாதர் உருவத்தின் கீழே, இரண்டு யானைத் தந்தங்களும், நடுவில் பாம்பும், பின் புறத்தில் சிலந்தியும் இருப்பதைக் காணலாம்.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பு, இக்கோயிலின் காற்று புகாத கருவறையில், லிங்கத்திற்கு ஏற்றப்படும் தீபம் ஆனது, சிறிது சிறிதாக உயர்ந்து மேலெழும்பி, நிற்காமல் அழகாக அசைந்து ஆடிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் கூட காற்றே இல்லாத கருவறையில் தீபம் மட்டும் அசைந்து ஆடிக்கொண்டே இருப்பது ஆச்சரிய அதிசயம் ஆகும்.
தாயுமானசுவாமி கோயில்
திருச்சி மாநகரின் அடையாளமாக, மிகக் கம்பீரமாக இருப்பது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் தான். இம்மலையின் கீழ்ப்புறத்தில் அமைந்துள்ளது தாயுமானசுவாமி கோயில். தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டுக் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள தலங்களில் ஆறாவது தலமாகும். மூலவரின் பெயர் தாயுமான சுவாமிகள். வடமொழியில் மாத்ருபூதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் மட்டுவார் குழலி. இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தந்தையாக இருக்கும் இறைவன், ஒரு பெண்ணுக்கு மகப்பேறு சமயத்தில் தாயாக வந்து உதவி செய்ததால், அவர் தாயும் ஆனவர் என்று பெயர் பெற்றார்.
இந்நிகழ்வை உணர்த்தவே ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாள் விழாவில், செட்டிப்பெண் மருத்துவம் என்னும் வைபவம் நடைபெறும் என்பது சிறப்பு. ரத்தினாவளியின் வழி வந்த மறபினர்கள், இப்போதும் இந்தத் திருவிழாவை வெகு விமரிசையான நடத்தி வருகிறார்கள். இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவ மருந்து வழங்கப்படுவது விஷேசமாகும்.
குழந்தை வரம் வேண்டி இங்கு நடத்தப்படும் வாழைத்தார் வழிபாடு பிரசித்தமானது. கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவமாக வேண்டி, இங்கு வந்து வாழைத்தார் வாங்கித் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்துகொள்வார்கள். பின்னர், பிரசவம் ஆன பின்னர், சுவாமி சன்னதியில் வாழைத்தாரைக் கட்டி அதைத் தொட்டிலாக ஆடவிட்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தவார்கள்.
திரிசிரன் என்ற மூன்று தலைகளைக் கொண்ட அசுரன் வந்து இங்கு வழிபட்டதால், திரிசிரன்பள்ளி என்று பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் அது மருவி திருச்சிராப்பள்ளி என்று மாறியது. இக்கோயிலின் மூலவரைக் காண 258 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். வழக்கமாக சிவாலயங்களில் மூலவருக்கு எதிரில், நந்திதேவருக்கு பின்னால் கொடிமரம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கு சிவனின் பின்புறத்தில் கொடிமரம் அமைந்துள்ளது. இத்தலத்தின் பெயரைச் சொன்னாலே முக்தி கிடைக்கும் என்று திருநாவுக்கரசு சுவாமிகள் பணிந்து தேவாரம் பாடிய திருத்தலம் ஆகும்.
திரிகோணமலை(இலங்கை)
அண்டை நாடான இலங்கையின் திரிகோணமலையில் அமைந்துள்ளது கோணேஸ்வரர் கோயில். இத்தல இறைவனின் பெயர் கோணேஸ்வரர், அம்மனின் பெயர் மாதுமையாள். சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட திருஞான சம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 276ஆவது தலம் என்பது கூடுதல் சிறப்பாகும். கந்தபுராணத்தை எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியார், சிவபெருமானின் ஆதி இருப்பிடங்களில் கைலாயம், சிதம்பரம் மற்றும் திரிகோணமலை என மூன்றைக் குறிப்பிட்டுள்ளார் என்பது இத்தலத்தின் சிறப்பாகும். இராவணனால் கட்டப்பட்டு வழிபட்ட மிகப் பழமையானது இத்தலம். இலங்கையின் பெருமைக்கு சான்றாக உள்ள இக்கோயில், வாயு பகவானால் உடைத்து வீசப்பட்ட மூன்று சிகரங்களுள் ஒன்று இம்மலைச் சிகரமாகும்.
இமயலையில் உள்ள கைலாய மலை, ஸ்ரீகாளஹஸ்தி, திருச்சி தாயுமானசுவாமி கோயில் மற்றும் இலங்கையின் கோணேஸ்வரர் கோயில் என இந்நான்கும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதாலேயே இவை தட்ஷிண கைலாயம் என்று அழைக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications