மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா - ஒடுக்கு பூஜை காண அலைமோதும் கூட்டம்
பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற மாசிக் கொடைவிழாவில், தீவட்டி ஊர்வல நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
கன்னியாகுமரி: பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற மாசிக் கொடைவிழாவில், தீவட்டி ஊர்வல நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசிக்க இப்போதிருந்தே கூட்டம் அலைமோதுகிறது.
Recommended Video
குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான ஆலயங்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் இங்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதுண்டு.

இங்கு நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்த பெற்றது மாசிக்கொடை விழாவாகும். இந்த ஆண்டு மாசிக்கொடை விழா கடந்த பிப்ரவரி 27ஆம் தேதியன்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து விழா நாட்களில் சமய மாநாடு, வெள்ளிப் பல்லக்கில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி, யானை மீது களப பவனி, பஜனை, பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவின் 6ஆம் நாளன்று நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவின் 9ஆம் நாளான நேற்று காலையில் பகவதி அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல் வைபவமும், மாலை 6:30 மணியளவில் சாயரட்சை தீபாராதனையும், இரவு 9 மணியளவில் அத்தாழ பூஜையும், அதைத் தொடர்ந்து 9:30 மணியளவில் பகவதி அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வரும் வைபவமும், பெரிய சக்கர தீவட்டியில் அலங்கார பவனி வருதல் வைபவமும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோயிலில் இருந்து புனித நீர் கொண்டு வரும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து 3:30 மணியளவில் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல் வைபவமும், அதிகாலை 4 மணியளவில் அடியந்திர பூஜையும், காலை 6 மணியளவில் குத்தியோட்டம், 6:30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது. இன்று மாலை 4 மணியளவில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சமய மாநாடும் நடைபெறுகிறது.
இன்றிரவு 9:30 மணியளவில், அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வரும் வைபவமும், நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை ஒடுக்கு பூஜை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்தப் பூஜையில் கலந்து கொள்ள குமரி மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பகவரி அம்மனை தரிசிக்க இப்போதிருந்தே கூட்டம் அலைமோதுகிறது.












Click it and Unblock the Notifications