ஆடி அமாவாசை..தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு புனித நீர் நிலைகளில் நீராடி ஏராளமானோர் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த நாளில் மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாகும்.
Recommended Video
முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த நிலையில், ஆடி அமாவாசை தினமான இன்று நீர்நிலை மற்றும் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி அமாவாசை நாளில் நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக உள்ள நிலையில் மதுரை வைகைஆற்றில் இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வருகின்றனர். இதேபோன்று மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
ஆடி அமாவாசையான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பண பூஜை செய்து வழிபடவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் 3 மணி நேரத்திற்கு மேலாக மிக பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மழையில் நனைந்தபடி அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளிலும் புனித நீராடிவிட்டு கோவிலின் ரதவீதிசாலையில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு ஓடுகின்றது. காசிக்கு நிகரான ஆறு ஸ்தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். ரிஷப தேவருக்கு ஏற்பட்ட செருக்கை அடக்க சிவபெருமான் அளித்த சாபம் நீங்க, ரிஷபதேவர், இங்கு காவிரியில் நீராடியதாக புராண வரலாறு கூறுகின்றது. இதனால், காவிரி துலாக்கட்டம், ரிஷப தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு 16புண்ணிய தீர்த்தக்கிணறுகள் காவிரி ஆற்றின் உள்ளே அமைந்துள்ளது. இதனால், இங்கு நீராடுவது புண்ணியமானதாக கருதப்படுகின்றது.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடி அமாவாசை நாளில் புனித நீராடவும் தர்ப்பணம் அளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இந்த ஆண்டு தடை நீக்கப்பட்டதுடன், காவிரியில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் சுற்று வட்டார பகுதி கிராமப்புறங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர்.
தென்னகத்தின் காசி, திரிவேணி சங்கமம், திருநானா என பல்வேறு சிறப்புக்களுடன் அழைக்கப்படும் புகழ் பெற்ற பரிகார ஸ்தலமான பவானி கூடுதுறையில் பவானி, காவேரி மற்றும் அமிர்தநதி ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் புராணங்களில் பாடப்பெற்ற சிவ ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்தில் வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து வழிபட்டு கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டால் பக்தர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். இதுபோல் பரிகாரங்கள் தோச நிவர்த்திக்கான வழிபாடுகள் செய்வதற்கும் சிறந்த இடமாக உள்ளது.

இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறைக்கு அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் பொதுமக்கள் வரத் தொடங்கினர். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசையையொட்டி பக்தர்களுக்கு புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதே போல் பரிகாரம் பூஜை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. பரிகார பூஜை செய்வதற்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே பவானி கூடுதுறையில் குவிய தொடங்கினர். பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர். பரிகார பூஜைகளுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் திருமண தடை மற்றும் பல்வேறு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.
இதேபோல் ஆடி அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றங்கரையிலும் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவேரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர். கொடுமுடி போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆண்கள் பெண்கள் புனித நீராட தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். கருங்கல்பாளையம் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றங்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதே போல் காலிங்கராயன் வாய்க்கால் பகுதிகளிலும் சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதலே புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு சென்றனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள புண்ணிய நதியாம் காவிரி ஆற்றில் இன்று ஆடி மாத அமாவாசை முன்னிட்டு ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தனர் முன்னதாக காவிரி ஆற்றில் நீராடி பின்னர் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கப்பட்டது பின்பு பிடித்த பிண்டங்களை காவிரியில் கரைத்து வணங்கி பிறகு மோகனூர் அசல தீபேஸ்வரர் சிவாலயத்தில் வணங்கி சென்றனர் இதில் கரூர் நாமக்கல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் கலந்து கொண்டனர்
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாலை 5-00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதணையும், 6.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கடற்கரையில் எள், அன்னம், தண்ணீர் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஏராளமானோர் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications