ஆடித் திருவிழா..குச்சனூர்,திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தேனி: பிரசித்தி பெற்ற குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, குச்சனூர் சுரபி நதிக்கரையில் சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான சனி பகவான், சுயம்பு வடிவில் மூலவராகக் காட்சி தருகிறார். குறிப்பாகத் தமிழ்நாட்டில் திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற கோயிலாக குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் உள்ளது.
இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் ஐந்து சனிக்கிழமைகளில் நடைபெறும். தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு சாமியைத் தரிசனம் செய்வர்.

ஆடி திருவிழா கொடியேற்றம்
இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குச்சனூா் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

ஆடி சனிக்கிழமை
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இக்கோயிலில் நடைபெற்ற ஆடித்திருவிழாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தளா்வு அறிவிக்கப்பட்ட பின்பு, இந்தாண்டு ஆடித்திருவிழா ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும்.

முதல் சனிக்கிழமை
சனிக்கிழமை முதல் வாரத்திருவிழாவை முன்னிட்டு 23ஆம் தேதியன்று காலை 11 மணியளவில் கலிப்பணம் கழித்து, சுத்தநீா் தெளித்து, நண்பகல் 12 மணி அளவில் கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சுவாமி திருக்கல்யாணம், சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு சாத்துப்படி செய்தல், கருப்பணசுவாமிக்கு பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வரும் வாரங்களில் நடைபெற உள்ளது.

திருநள்ளாறு சனிபகவானை தரிசித்த பக்தர்கள்
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆடி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

வெள்ளி கவச அலங்காரம்
சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீசனிபகவானுக்கு நல்லெண்ணை,மஞ்சள்,பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும்,வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனையும் நடைபெற்றது. அதிகாலை முதல் பக்தர்கள் நளதீர்த்தத்தில் புனித நீராடி வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நளன்கலி தீர்த்த விநாயகரை வழிபட்டு பின்னர் எள் தீபமேற்றி வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீசனிபகவானை தரிசித்து சென்றனர்.












Click it and Unblock the Notifications