ஐப்பசி பிரதோஷம், பவுர்ணமி - சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர்: ஐப்பசி பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வந்த பக்தர்கள்
மலையேறி சாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவிலிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை. சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளன. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த வழிபாட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் திரளாக கலந்து கொள்வார்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள்.
சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை தொழ வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர். ஆடி அமாவாசை திதியில் இந்த சந்தன லிங்கேஸ்வரரை தொழுதார்க்கு உறுதியாய் காம்யலோகம் கிட்டும் என்றும் கூறியுள்ளார். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர். சதுரகிரியில் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி மகிழ்கின்றனர் என்கிறது, அகஸ்தியர் நாடி.
காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது.
இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம்.
சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். மலைச் சாரலில் உள்ள தவசிகள் குகையில் சித்தர்கள் இன்றும் தவம் செய்து வருகின்றனர். ஒளி வடிவ உடல் தாங்கி, நிர்வாண கோலத்தில் தவபுருஷர்களும் சித்தர்களும் தவம் செய்வதாகவும், இவர்களின் தவத்திற்கு யாரும் இடையூறு செய்யாதபடி சித்தர் பரிவாரங்களும் வனதேவதைகளும் வண்டு, கரடி, புலி போன்ற வடிவங்களில் பாதுகாப்பு தருவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
சதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
இக்கோவில் தரைமட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமிக்கு 4 நாட்கள் அமாவாசைக்கு 4 நாட்கள் என மாததிற்க்கு 8 நாட்கள் மட்டும் மலையேறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
கடந்த இரண்டரை மாதங்களுக்குப் பிறகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குஐப்பசி மாதப் பிரதோஷம் மற்றும்பௌர்ணமிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேற்று முதல் வரும் 21ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சென்னை, கோவை,மதுரை, தேனி,திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்கு முன்பு ஆயிரகணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்
காலை 7 மணிக்கு வனத்துறை திறக்கப்பட்டு பக்தர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மலையேறி சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பக்தர்கள் மலைப்பாதை வழியாக கூட்டம் கூட்டமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.