ஆனி பிரதோஷம், அமாவாசை..சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி
நாளை பிரதோஷத்தையொட்டி, சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளன.
மதுரை: ஆனி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் நாளை முதல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. நாளை பிரதோஷத்தையொட்டி, சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளன.
விருதுநகர் மாவட்டம் வத்றாயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர்.
ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை தொழ வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர். சதுரகிரியை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர்.

இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி மகிழ்கின்றனர் என்கிறது, அகஸ்தியர் நாடி.
இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 4 நாட்கள் என மாதத்திற்கு 8 நாள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஜூன் 26ஆம் தேதி ஆனி மாத தேய்பிறை பிரதோஷம், 28ம் தேதி ஆனி மாத அமாவாசையையொட்டி நாளை முதல் வரும் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். இதனால் மாதந்தோறும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்கின்றனர்.
நாளை பிரதோஷத்தையொட்டி, சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.












Click it and Unblock the Notifications