திருப்பதியில் நாளை ஆனிவார ஆஸ்தானம்.. ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் அனுப்பிய ஸ்ரீரங்கநாதர்
ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூமாலைகள், பழங்கள், மங்கலப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
திருப்பதி: ஆடி மாத பிறப்பு ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூமாலைகள், பழங்கள், மங்கலப் பொருட்கள் திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு ஆனிவார ஆஸ்தானம் நாளைய தினம் கொண்டாடப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
மொகலாய மன்னர்களின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது.
இதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி 1ம் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

ஆனிவார ஆஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவு கணக்குகள் சுவாமியிடம் சமர்ப்பிக்கும் ஆனி வார ஆஸ்தானம் எனப்படும் விழா ஆனி மாதம் கடைசி நாளில் பாரம்பரியமாக நடைபெறும். 1956ம் ஆண்டுக்கு பின்பு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கிய பின் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோவில் கணக்கு முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் புதிய கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்
சம்பிரதாய முறைப்படி ஏழுமலையான் கோவிலில் ஆனி கடைசி நாளில் வரவு, செலவு கணக்குகள் சுவாமி முன் படிக்கப்படும். பின்னர், சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படும். இந்த சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தலா 1 ரூபாய் பெறப்பட்டு புதிய ஆண்டிற்கான கணக்கு தொடங்கப்படும்.

ஆடி முதல் நாள் பண்டிகை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு ஆனிவார ஆஸ்தானம் வரும் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், உற்சவரான மலையப்பர் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருவாய் கணக்கு வழக்குகள் ஒப்பிக்கப்பட்டு, கணக்குகள் சமர்ப்பிக்கப்படும். அப்போது சிறிது நேரம் பக்தர்கள் முன்னிலையில் சுவாமி நிறுத்தப்படுவார்.

கோவில் சாவி ஒப்படைப்பு
தங்க வாசல் அருகே சர்வபூபால வாகனத்தில் இந்த ஐதீகமுறை நடத்தப்படும். அப்போது, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பரும், இவர்களுடன் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வகேசவரும் இருப்பர். பின்னர் தேவஸ்தான கோயில் சாவி மூலவரின் காலடியில் வைத்து பூஜை செய்த பின்னர் மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
ஆனிவார ஆஸ்தானம் இம்முறை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு முதலே திருமலையில் பக்தர்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. 20 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கநாதர் சீர் வரிசை
ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து ஆண்டு தோறும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூமாலைகள் அடங்கிய சீர்வரிசைப் பொருட்களை அனுப்புவது வழக்கம். அதன்படி வியாழக்கிழமையன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்படும் வஸ்திரங்கள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அனைத்தும் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பட்டு வஸ்திரங்கள் பூமாலைகள்
யானை மீது ஒரு தட்டினை வைத்தும் மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து வஸ்திர மரியாதைகளுடன் நேற்று இரவு புறப்பட்டு திருப்பதிக்கு எடுத்து சென்றனர். இவர்கள் ஆடி முதல் தேதியன்று திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்து விட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ், கோவில் இணைஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications