என்னோட ராசி நல்ல ராசின்னு நாளைக்கு பாடப்போறவங்க யார்- லோக்சபா தேர்தல் ரிசல்ட் 2019
இந்திய நாட்டை 5 ஆண்டுகாலம் ஆளப்போவது யார் என்று இன்னும் 30 மணி நேரத்தில் தெரிந்து விடும். ஆளுங்கட்சி, எதிர்கட்சியினர் தூக்கத்தை தொலைத்து இறைவனை வேண்டிக்கொண்டிருக்கின்றனர்.
மதுரை: படுபரபரப்பாக நடந்து முடிந்துள்ளது லோக்சபா தேர்தல். இந்திய அரசியல் களம் படு சூடாகவே இருக்கிறது. அக்னி நட்சத்திர வெயிலை விட அனல் பறக்கிறது அரசியல் களம். இந்திய திருநாட்டினை அடுத்த 5 ஆண்டு காலம் ஆளப்போவது யார் என்பதனை முடிவு செய்து மக்கள் வாக்களித்து விட்டார்கள். நாளை முடிவு வெளியாகிறது. நவகிரகங்களின் கூட்டணி, கிரகங்களின் இடப்பெயர்ச்சி நாடாள்பவர்களை தீர்மானிக்கிறது. எந்த ராசிக்காரர்களுக்கு ராசியான நாளாக நாளை அமையப்போகிறது என்று பார்க்கலாம்.
தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்காக நகத்தைக் கடித்துக்கொண்டு காத்திருக்கும் மாணவர்கள் காத்திருப்பதைப் போல நாடு முழுவதும் போட்டியிட்ட வேட்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்பு பல தலைவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆளும்கட்சி, எதிர்கட்சி, மாநிலக்கட்சித்தலைவர்களை மட்டுமல்லாது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தொண்டர்கள் மத்தியிலும் பதற்றத்துடன் கூடிய எதிர்பார்ப்பு உள்ளது. ரகசிய யாகங்களை பல தலைவர்கள் நடத்தியுள்ளனர். மீண்டும் தாமரை மலருமா அல்லது கை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 272 என்ற மேஜிக் நம்பரை பெற்று பெரும்பான்மை பலத்துடன் நாட்டை ஆளப்போவது யார் என்பது இன்னும் 24 மணிநேரத்தில் தெரிந்து விடும்.
நவகிரகங்களின் கூட்டணி
பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஒருபக்கம் இருந்தாலும் ராசிகளில் அமர்ந்திருக்கும் நவ கிரகங்களின் கூட்டணி, வேட்பாளர்களின் தசாபுத்தி, ஜாதக அமைப்பும் ஆட்சிக்கட்டிலில் அமரப்போகிறவரின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. அரசியல்வாதிகள் பலரும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே பல முடிவுகளை எடுக்கின்றனர். கடவுளை நம்பாத தலைவர்கள் கூட கடந்த சில ஆண்டுகளாக பரிகார பூஜைகள், ஜோதிட ஆலோசனைகளை செய்து வருகின்றனர்.
கிரகங்களின் சஞ்சாரம்
வியாழக்கிழமை கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப லக்னம் லக்னத்திலேயே சூரியன், புதன் சஞ்சரிக்கின்றனர். மேஷம் ராசியில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய் உடன் ராகு, விருச்சிகம் ராசியில் குரு, தனுசு ராசியில் சந்திரன் கேது சனி அமர்ந்திருக்கின்றனர். 11 மணிக்கு மேல் சந்திரன் மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கப் போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.
நிலையான ஆட்சி
அடுத்த 5 ஆண்டிற்கு பிரச்சினையில்லாத வகையில் ஆட்சி நடக்க பெரும்பான்மை பெற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்குமா? எதிர்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்குமா? தொங்கு நாடாளுமன்றமா? மாநிலக்கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைத்து ஆட்சியை பிடிக்குமா? என்பதே பலரின் எதிர்பார்ப்பு.
விருச்சிக ராசி தலைவர்கள்
இன்றைய கிரகங்களின் சஞ்சாரப்படி பார்த்தால் விருச்சிக ராசிக்கு ஆறாம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருக்கிறார். ஏழாம் வீட்டில் அரசு கிரகமான சூரியன் அமர்ந்திருக்க கூடவே புதன் கூட்டணி இணைந்து புத ஆதிபத்ய யோகத்துடன் உள்ளது. எட்டில் செவ்வாய் ராகு இருப்பது பாதகமான அம்சம்தான் என்றாலும் இரண்டாம் வீட்டில் உள்ள சந்திரன் சனி கேது செய்ய வேண்டிய நன்மைகளை செய்வார். விருச்சிக ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு இன்றைய தினம் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
தனுசு ராசி தலைவர்கள்
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஜென்ம ராசியில் சனி, சந்திரன் கேது இணைந்திருப்பது பாதகமான அம்சம்தான். ஏழாம் வீட்டில் செவ்வாய் ராகு கூட்டணி இருக்கிறது. மறைவு ஸ்தானமான ஆறாம் வீட்டில் அரசு கிரகமான சூரியன் புதனுடன் இணைந்து மறைந்திருக்கிறார். ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்தான்.
மோடிக்கு எப்படியிருக்கு
கோச்சார ரீதியாக நரேந்திர மோடிக்கு ஏழரை சனியின் பாத சனி நடக்கிறது. ராசியிலேயே குரு வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். இரண்டாம் வீட்டில் சனி கேதுவும் எட்டாம் வீட்டில் செவ்வாய், ராகுவும் இணைந்திருக்கின்றனர். ராசியில் உள்ள குரு நேராக சூரியனை பார்க்கிறார். கூடவே புதனையும் பார்வையிடுகிறார். மோடி ஜாதகத்தின் படி சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் மோடிக்கு சாதகமான நிலையில் உள்ளன.
கிரகங்களின் பார்வை சாதகம்
கோச்சார ரீதியாக சூரியன், புதன், சனி கேது சாதகமாக உள்ளதால் மீண்டும் பிரதமர் பதவியில் அமர 100 சதவிகித வாய்ப்புள்ளது என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும். ஆனால் மோடி ஜாதகத்தில் உள்ள சனி கிரகத்தின் அம்சம் காரணமாக அவரால் முழு மெஜாரிட்டி பெற்று பிரதமர் நாற்காலியில் அமர முடியாது. மற்றவர்களின் உதவி பெற்றுதான் அவரால் ஆட்சியில் அமர முடியும் என்றும் சில ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
யோகங்கள் கூடி வருது
நடப்பு தசா புத்தியான சந்திரன் அவருக்கு அதிகப்படியான வெற்றிகளைத் தேடித்தந்து பிரதமர் நாற்காலியில் அமரவைக்கும் மோடியின் ஜாதகத்தில் 10ஆம் இடத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்துள்ளன. இது 'சண்டாள யோகம்' அமைப்பாகும். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது என்கின்றனர். மோடி ஜாதகத்தில் சந்திர மங்கள யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம் என்று பல யோகங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கூடவே புதஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம், ரூசக யோகம், கஜகேசரி யோகம் என யோகங்கள் இருப்பதால் மோடிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
ராகுல்காந்திக்கு ராகு திசை
ராகுல்காந்தி தனுசு ராசி, மூலம் நட்சத்திரம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்திக்கு பத்தாமிடத்தில் லக்னாதிபதி சுக்கிரன் வலுப்பெற்று அமைந்துள்ளார். ஏழாம் வீடான மிதுனத்தில் சூரியன், செவ்வாயோடு இணைந்துள்ளார். சிம்மத்தில் கேது அமர்ந்துள்ளார். ராகுல்காந்தியின் ஜாதகத்தில் சூரியனுக்கு முன்னும் பின்னும் சுப கிரகங்களான புதனும் சுக்கிரனும் அமர்ந்திருக்கின்றனர். சுபகார்த்தாரி யோகம் அமைந்துள்ளது. சூரியனுக்கு 12ல் புதன் அமர்ந்திருக்க வசி யோகம் கூடி வந்துள்ளது. ஏழரை சனியில் ஜென்ம சனி நடந்து கொண்டிருக்கிறது. தசாபுத்தியை பார்த்தால் ராகுதிசை ராகுபுத்தி நடக்கிறது.
தலைமை பதவி
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்தார் ராகுல் காந்தி. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 3 மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருந்த பாஜகவை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. ராகுல்காந்தி தலைவரான பின்னர் கிடைத்த முதல் வெற்றி என்பதால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொண்டாடினர். இதனையடுத்தே ராகுல்காந்தியை தமிழ்நாட்டில் வைத்து பிரதமர் வேட்பாளராக அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
பிரதமர் நாற்காலி கிடைக்குமா
இந்த அறிவிப்பை மம்தா பானர்ஜியோ, மாயாவதியோ விரும்பவில்லை. ஏனெனில் அவர்களும் பிரதமர் கனவில் இருக்கின்றனர். மாநில கட்சிகள் இணைந்து 3வது அணி அமைக்கலாம் என்றாலும் கிரகங்களின் சூழ்நிலை பாஜகவைத் தவிர யாருக்கும் சாதகமில்லை. காங்கிரஸ் கட்சி தனித்து 90 முதல் 95 இடங்களை மட்டுமே பிடிக்க வாய்ப்பு உள்ளது. நடப்பு கோட்சாரம் மற்றும் தசாபுக்தி அமைப்புகள் சாதகமாக இல்லாததால் இம்முறை அதி உச்ச பதவியான பிரதமர் அடைவதற்கு ராகுலுக்கு தடை இருக்கும் என்பதே ஜோதிடர்களின் கணிப்பு. கணிப்புகள் உண்மையாகுமா இன்னும் 24 மணிநேரத்தில் தெரிந்து விடும்.