ஸ்ரீ ரங்கத்தில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்... ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்ட வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா முழக்கத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
Recommended Video
வைணவ பக்தர்களால் பூலோக வைகுண்டம் என்று பூஜிக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 திருப்பதிகளில் முதன்மைத் தலமாகவும் பஞ்சரங்கத்தலங்களில் ஒன்றாகவும் வைத்து போற்றப்படும் முக்கிய ஆலயமாகும்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்டத் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்ற வைபவத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் ரங்கா.... ரங்கா... என பக்திப் பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.
திருவிழா நடைபெறும் நாட்களில், நம்பெருமாள் தினமும் காலை, மாலை என இருவேளையும் திருவீதியுலா வைபவம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏப்ரல் 27ஆம் தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்ட வைபவம் இன்று காலை தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ரங்கா... ரங்கா... என பக்தர்கள் முழக்கமிட்டது விண்ணை எட்டியது. பக்தர்களுக்கு குடிநீர் வசதியும் பாதுகாப்பு வசதியும் செய்யப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 6 மணி முதல் ஸ்ரீரங்கத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தேரோட்டம் முடிந்த பிறகு மின்விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாளைய 30ஆம் தேதியன்று சப்தாவரணமும், மே 1ஆம் தேதியன்று ஆளும் பல்லக்குடன் சித்திரை திருவிழா நிறைவடையும்.