தீபாவளி : 12 லட்சம் தீபங்களால் ஜொலிக்கப்போகும் அயோத்தி - கொண்டாட தயாராகும் மக்கள்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில், இன்று இரவு 12 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு, இன்று இரவு 12 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி அயோத்தியை அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 ஆண்டுகள் வனவாசம் மற்றும் ராவணனை தோற்கடித்த பிறகு அயோத்திக்கு திரும்பும் ராமர், சீதையை வரவேற்கும் வகையில் அயோத்தியில் ஆண்டு தோறும் தீபாவளிப் பண்டிகை வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
Recommended Video
தீபாவளிப் பண்டிகை கொண்டாடாப்படுவதற்கு புராண இதிகாச கதைகள் சொல்லப்பட்டாலும் கூட, இக்கதைகள் அனைத்தும் நமக்கு வலியுறுத்துவது தீமைகள் அழித்து மக்களின் மனதில் மகிழ்ச்சியை மலரச் செய்த நன்னாள் என்பது தான். இதைக் கொண்டாடவே, நாட்டு மக்கள் அனைவரும் எந்தவித மதவேறுபாடும் இல்லாமல் போட்டி போட்டுக்கொண்டு புத்தாடை, இனிப்புகள், பட்டாசு என இந்நன்னாளில் அமர்க்களப்படுத்துகின்றனர்.
வட இந்தியாவில் சில மாநிலங்களில், ஸ்ரீராமபிரான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்து தன் குடும்பத்தோடு அயோத்தி நகரத்திற்கு திரும்பிய நன்னாளையே தீபாவளியாக கொண்டாடிவருகின்றனர். ஸ்ரீராமபிரான் வனவாசம் சென்றதால் ஒளியிழந்து களையிழந்த தங்கள் அயோத்தி மாநகரம், ஸ்ரீராமபிரான் திரும்பி வந்த உடன் ஒளிபெற்றதாக கருதி பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து கொண்டும் பட்டாசுகளை வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த கொண்டாட்டம் உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், பீஹார், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த பாரம்பரிய பழக்க வழக்கமானது இன்றும் தொடர்ந்து இருந்து வருகிறது.
தீபாவளி கொண்டாட போறீங்களா?.. பரவசத்தில் பாதுகாப்பை மறக்காதீர்.. தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை
இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 12 லட்சம் விளக்குகளை ஏற்றி அயோத்தியை அலங்கரிக்கப் போகின்றனர். அயோத்தியில் சரயு ஆற்றங்கரையில் உள்ள படித்துறைகளில் 9 லட்சம் விளக்குகளும், நகரின் மற்ற இடங்களில் 3 லட்சம் விளக்குகளும் ஏற்றப்பட உள்ளன. இதன்மூலம் புதிய சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். யோகி ஆதித்யநாத் அழைப்பின்பேரில், மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியும் பங்கேற்கிறார். நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சி, ராமாயண சம்பவங்களை விளக்கும் அலங்கார ஊர்திகள் ஊர்வலம், ராமலீலா, லேசர் ஷோ ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.