சோமவார பிரதோஷம், மாசி மகம் : சதுரகிரி மலைக் கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு இன்று முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: சோமவார பிரதோஷம், மாசி மகத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் நான்கு நாட்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர். காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சந்தன மகாதேவி சமேத சந்தன மகாலிங்கேஸ்வரரை தொழுதால், அனைத்து எண்ணங்களும் வாழ்வில் நிறைவேறும் என்கின்றனர் கோரக்கர் உள்ளிட்ட அனைத்து சித்தர்களும்.
இந்த ஆலயத்திற்கு வந்து மலையேறி சென்று ஏராளமானோர் சாமி தரிசனம் செய்வார்கள்.இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களிலில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி இன்று முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
14 ஆம் தேதி பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாசி மாத பவுர்ணமிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் கோவிலுக்கு வர அனுமதியில்லை. அத்துடன் முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரவு நேரத்தில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
நீர் ஓடையில் செல்லும் தண்ணீரில் குளிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications