அரசாளும் யோகம்...வெற்றிகள் தேடித்தரும் சந்திரனால் என்னென்ன யோகங்கள் தெரியுமா
அமாவாசை யோகம், பௌர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களைத் தருபவர் சந்திரன்.
சென்னை: நமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும். சந்திரன் மாதுர்காரகன், அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறிய முடியும். சந்திரன் மனோகாரகனும்கூட, அதாவது மனதை ஆள்பவன். சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும்.
அமாவாசை யோகம், பௌர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களைத் தருபவர் சந்திரன். திங்கட்கிழமையான இன்றைய தினம் சந்திரன் தரும் யோகங்களைப் பற்றி பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சூரியனையும் சந்திரனையும் ராஜ கிரகங்கள் என சிறப்பித்து போற்றப்படுகிறது. மேலும் சூரியனை ஆத்ம காரகன் மற்றும் பித்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். சந்திரனை மனோ காரகன் என்றும் மாத்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 8,16,473 பேர் தேர்ச்சி - பள்ளிக்கு வராத 1656 மாணவர்கள் தேர்ச்சியில்லை
சூரியனும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்தான் அனைத்து நல்ல பலன்களும் ஜாதகர் அனுபவிக்க முடியும். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். சந்திரனை "சந்திரமா மனஸோ ஜாத:" வேதம் போற்றுகிறது. இவரே உடலுக்கு காரகன். சர்வம் சந்திர கலாபிதம் என்று சந்திரனை ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. லக்னத்துக்கு அடுத்தபடியாக முக்கியம் வாய்ந்தது ராசி.
சந்திரன் தரும் யோகங்கள்
ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி 'நீங்கள் என்ன நட்சத்திரம், என்ன ராசி? என்பது. எந்த நட்சத்திர தினத்தன்று நாம் பிறந்தோமோ, அது நமது ஜென்ம நட்சத்திரம். அந்த நட்சத்திரத்துக்கான ராசி ஜென்மராசி அல்லது ஜனன ராசி. இந்த ராசியின் அடிப்படையிலேயே யோகங்கள் உண்டாகின்றன. அதுபோல குருபலம், ஏழரை சனி, அஷ்டம சனி கண்டசனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன. எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை. சூரியனுக்கு 7ஆம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது பௌர்ணமி ஏற்படும். இந்த 2 நாட்களில் பிறந்தவர்களுக்கும் யோகங்கள் கிடைக்கும்.
ஒளி தரும் யோகம்
சூரியனும் சந்திரனும் நேருக்கு நேராக பார்த்துக்கொள்ளும் பௌர்ணமி அமைப்புடன் உள்ள நேரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட உயர்ந்த நிலையில்தான் இருப்பார்கள் என்பது ஜோதி விதி. சந்திரன் பூரண ஒளியோடு இருக்கும் பௌர்ணமி நாளில் பிறந்தவர்கள் அரசாளும் யோகம் கொண்டவர்களாக இருக்கின்றனர். பௌர்ணமி சந்திரன் தனது வலிமை குன்றாமல், முழு சுபராக இருந்தால் அந்த ஜாதகருக்கு சந்திர தசை சிறப்பாக அமையும்.
திறமைசாலிகள்
சூரியன் சந்திரன் இணைந்து மிகப்பெரிய யோகத்தை தருகிறது. ஒளி கிரகங்களான சூரியன் சந்திரன் இணைந்து 1,5,9ஆம் இடங்களில் இருந்தால் ராஜயோகம். சந்திரன் அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும். சந்திரன் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பு. ரிஷப ராசியில் சூரியன்,சந்திரன் இணைந்திருப்பதும் கடக ராசியில் சூரியன் சந்திரன் இணைந்து அமாவாசை யோகம் பெற்றிருப்பதும் சிறப்பு. ஆடி அமாவாசையில் பிறந்தவர்கள் அரசாள்வார்கள் என்று என்பது ஜோதிட விதி. அமாவாசை திதியில் பிறந்தவர்களுக்கு அதிக அறிவாற்றல் இருக்கும். திறமையானவர்களாக திகழ்வார்கள்
சசி மங்கல யோகம்
சந்திரன் சம்பந்தப்படும் யோகங்களில் பலரும் அறிந்த யோகம் 'சந்திர மங்கள யோகம்' ஆகும். செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் சம்பந்தப்பட்ட யோகம் இதுவாகும். பெண்களின் பூவுக்கும், பொட்டுக்கும் சொந்தமாக இருக்கும் செவ்வாய் மங்களகாரகன் என்பதால் மங்களன் என்ற பெயரும் உண்டு. அதுபோல சந்திரனுக்கு சசி என்ற பெயரும் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில், 'சசி மங்கள யோகம்' என்றும் இந்த யோகம் சொல்லப்படுகிறது. இந்த யோகத்தினால் எதிர்பாராத தன வரவு, செல்வாக்கு, கல்வி, அதிகாரம், காரிய வெற்றி, வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும்.
யோகங்கள் எப்படி
சந்திரனும், செவ்வாயும் கூடி இருப்பது அல்லது இரு கிரகங்களும் நேருக்கு நேரான பார்வை செய்வதன் மூலம் இந்த யோகம் ஏற்படுகிறது. மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி பெற்ற நிலையில் இருந்து கடக ராசியில் சந்திரன் ஆட்சி பெற்ற நிலையில் அமரும் போது செவ்வாயின் பார்வை சந்திரன் மீது படுவதால் இந்த யோகம் ஏற்படும். அது போல மேஷ ராசியில் செவ்வாய் சஞ்சரிக்க துலாம் ராசியில் அல்லது விருச்சிகம் ராசியில் சந்திரன் இருந்தாலும் இந்த யோகம் வரும்.
குருவும் சந்திரனும் இணைந்த யோகம்
சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும். குருவும், சந்திரனும் ஒருவரின் ஜாதக கட்டத்தில் சேர்ந்திருந்தால் நல்ல யோகங்கள் ஏற்படும். ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் குரு சேர்ந்திருந்தாலோ அல்லது குரு இருக்கக்கூடிய இடத்திலிருந்து குருவின் பார்வை விழக்கூடிய 5, 7, 9 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தாலும் இந்த குரு சந்திர யோகம் உண்டாகும். இதனால் செல்வம், செல்வாக்கு, புகழ் தேடி வரும்.
வெற்றி தரும் யோகம்
குரு சந்திரன் இணைப்பின் காரணமாக குரு சந்திரன் யோகம் மட்டுமல்லாமல் கஜகேசரி யோகம், சகட யோகம் என மேலும் இரண்டு யோகங்கள் உருவாகின்றன. சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 4,7,10ஆம் இடங்களில் குரு இருப்பின் அது கஜகேசரி யோகம் ஆகும். எதிரிகளை சிங்கம் போல எதிர் கொண்டு அழிக்கக்கூடியவர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் சொன்னதை செய்யக்கூடிய செயலாற்றல் கொண்டவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.
வாழ்க்கை ஏற்ற இறக்கம்
சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 2, 6, 8, 12ஆம் இடங்களில் குரு அமர்ந்தால் சகட யோகம் ஏற்படும். வாழ்க்கையானது ஏற்ற இறக்கம் கொண்டதாக இருக்கும். அதிர்ஷ்டம் அவ்வப்போது வந்தாலும் வெகு சீக்கிரம் மறைந்து விடும். இனம்புரியாத மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் நிலையான முன்னேற்ற வாழ்க்கை இருக்காது. ஜாதகத்தில் மற்ற சுபகிரகங்களின் அமைப்பு, பார்வையைப் பொருத்து பாதிப்புகள் குறைந்து நல்ல பலன்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.