கோடீஸ்வர சாமி ஏழுமலையானுக்கு மண் சட்டியில் தயிர்சாதம் நைவேத்தியம் ஏன் தெரியுமா
திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. மன்னாதி மன்னன் கொடுத்த தங்கத்தை விட மண் பாண்டம் செய்யும் குயவனின் அன்பே பெரிது என்று ஏற்றுக்கொண்டவர் ஏழுமலையான்.
திருப்பதி: பல கோடி சொத்துக்களின் அதிபதியாக இருக்கும் ஏழுமலையானுக்கு தினந்தோறும் கோடி கோடியாக உண்டியல் காணிக்கை சேருகிறது என்றாலும் அவருக்கு படையல் மண்பானையில் வைக்கப்படும் தயிர்சாதம்தான். மன்னன் கொடுத்த தங்கப் பூ மாலையை விட மண்ணால் குயவர் செய்த மாலையை அன்போடு ஏற்றுக்கொண்டவர் திருப்பதி ஏழுமலையான். மன்னாதி மன்னன் கொடுத்த தங்கத்தை விட மண் பாண்டம் செய்யும் குயவனின் அன்பே பெரிது என்று ஏற்றுக்கொண்டவர் ஏழுமலையான்.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்ற பிரசாதங்கள் தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.

ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
அது ஏன் பெருமாளுக்கு மண்பானையில் தயிர்சாதம் நைவேத்தியம் செய்யப்படுகிறது என்பது பற்றி ஒரு புராண கதை ஒன்று உள்ளது.
பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.
பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள் புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரமாகும். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான். இப்படி தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அந்த நேரத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாத நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான்.
மன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது பக்தியோடு பாசமும் அதிகம். ஏழுமலையான் திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுந்தது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என வருத்தப்பட்டான் மன்னன் தொண்டைமான்.
குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான். அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே நீயும் செய்து பார் அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார்.
தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிக்கொண்ட தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி. உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான்.
ஏழுமலையான் அன்றைய தினம் பீமய்யனின் கனவிலும் தோன்றினார். அதைப்பார்த்த பீமய்யாவின் மெய்சிலிர்த்தது. உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுண்டத்திற்கு அழைத்துக் கொள்வேன் எனக் கூறியிருந்தார். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படி ஒரு மிகப்பெரிய மகத்துவம் இருக்கிறது. பெருமாளின் ஆணைப்படி அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.
புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை போட்டு வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.












Click it and Unblock the Notifications