குரு பெயர்ச்சி பலன் 2022: மீன ராசியில் ஆட்சி பெற்று அமரும் குருவினால் யாருக்கெல்லாம் பாதிப்பு
குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லப்போகிறார். பங்குனி 30ஆம் தேதி ஏப்ரல் 13ஆம் தேதி குருபகவான் மீன ராசிக்கு செல்வதால் யாருக்கெல்லாம் சாதகம் யாருக்கெல்லாம் பாதகம் என்று பார்க்கலாம்.
சென்னை: குருபகவான் தனது சொந்த ராசியான மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். ஏப்ரல் மாதம் 13ம் தேதி குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடபெயர்ச்சி அடைவதை முன்னிட்டு பல கோவில்களில் லட்சார்ச்சனை விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. குருபகவானின் இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை நடைபெறும் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
நவகிரகங்களின் குரு பகவான் பொன்னவன் என்று போற்றப்படுகிறார். குருவின் பார்வை பொன்னான பலன்களைத் தரும் என்பதால்தான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் நிகழும் மங்களகரமான பிலவ ஆண்டு பங்குனி மாதம் 30ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
தனக்காரகனும், வேத-ஞானக் கல்விக் கிரகமான குருபகவான் கடந்த இரண்டு ஆண்டு காலமாக நிலையாக ஒரு ராசியிலும் இல்லாமல் வக்ரத்திலும், அதிசாரத்திலும் மாறி மாறி சென்றதால் தான் உலக பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை காணப்பட்டது. நோய் நொடிகள் ஏற்பட்டன. கல்விக் கூடங்களிலும் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டது. தனியார் துறை கல்வி நிறுவனங்களின் கட்டண விகிதத்தை நெறிப்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது. தங்கத்தின் விலையும் தாறுமாறாக ஏறியது. பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன.

மீன ராசியில் அமரும் குருபகவான்
12 ஆண்டுகளுக்குப் பிறகு குருபகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவதால் இனி நாட்டின் பொருளாதார நிலை சற்றே உயரும். தடுமாறிக் கொண்டிருந்த வங்கிகளின் நிதிநிலை அதிகரிக்கும். தங்கத்தில் அதிகமானவர்கள் முதலீடுகள் செய்வார்கள். கடல் வாழ் உயிரினங்களை காக்க புது சட்டம் வரும். பூமி விலை கணிசமாக உயரும். சிமெண்ட், உரம், இரும்பு இவற்றின் விலை உயரும். வேலை வாய்ப்பு பெருகும்.

எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு
குரு பகவான் மீன ராசியில் அமரப்போவதால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களும் கிடைக்கப்போகிறது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் கவனமாக இருப்பது அவசியம். குறிப்பாக பணம், வேலை விசயங்களில் அதிக விழிப்புணர்வு தேவை. எதையும் முன்யோசனை இல்லாமல் செய்யக் கூடாது. அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டு அவதிப்படக்கூடாது.

நலம் பெறும் ராசிக்காரர்கள்
இந்த குருப்பெயர்ச்சியால் கும்பம்,ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. குறிப்பாக பண வருமானம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். திருமண யோகம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம்.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்
நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் விளங்குகிறது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் வருகிற ஏப்ரல் மாதம் 13ம் தேதி குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு இந்த கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்
இந்த குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குருபகவானுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும் முதல்கட்ட லட்சார்ச்சனை, குருப்பெயர்ச்சிக்கு பிறகு ஏப்ரல் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 2ம் கட்ட லட்சார்ச்சனை நடக்க இருக்கிறது. இந்த குருப்பெயர்ச்சி விழாவையொட்டி மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து பயன் பெறலாம். இந்த லட்சார்ச்சனையின் கட்டணம் ரூ.400 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு லட்சார்ச்சனை
இந்த லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குரு பகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்பட இருக்கிறது. லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடக்க உள்ளது. லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழுமையான விவரங்களுடன் தொகையை உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர், ஆபத்சகாயேஸ்வரர் கோவில் என்ற பெயருக்கு வரைவோலை எடுத்து கோயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இந்த குருப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார்- அறநிலைய உதவி ஆணையர் ஹரிஹரன், அறநிலைய உதவி ஆணையர்-செயல்அ லுவலர் தமிழ்ச்செல்வி, கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications