சனிபகவான், ராகு, கேதுவால் திருமண தடையா? - பரிகாரத் தலங்கள்
பருவத்தே பயிர் செய் என்பது போல பருவத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க வேண்டும். திருமண வயதை கடந்த பின்னரும் சரியான வரன் கிடைக்காமல் தவிப்பார்கள் பெற்றோர். திருமண வரம் தரும் பரிகார தலங்களைப் பார்க்க
Recommended Video
சென்னை: ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சரியில்லை என்றாலும், களத்திரகாரகன் பாவிகள் சேர்க்கை பெற்றோ, பாவிகள் பார்வையில் இருந்தாலோ திருமண தடை ஏற்படும். ராகு - கேது, சனி பகவானும் திருமண தடை ஏற்பட காரணமாக அமைகின்றன. ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும். அந் நேரத்தில் பிறக்கிற குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.
திருமண வயதை கடந்தும் திருமணம் நடைபெறாமல் இருப்பதால் மனதளவில் இளைஞர்களும், இளம் பெண்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஜாதக நோட்டை எடுத்துக்கொண்டு பெற்றோர்கள் நடையாய் நடந்து அலுத்து போவார்கள்.
ஏழாம் வீட்டில் ராகுவும் லக்னத்தில் கேதுவும் இருந்தால் அது கால மிருத்யு சர்ப்ப தோஷம். இவர்களுக்கு 27வயதுக்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் செய்து கொண்டால் அது நிலைக்காது தமிழகத்தில் திருமண தடை நீக்கும் பரிகார தலங்கள் பல உள்ளன. இந்த ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்து வழிபட்டால் தடையின்றி திருமணம் நடக்கும்.
- ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 7ம் பாவமானது களத்திர ஸ்தானமாகும். நவக்கிரகங்களின் சுக்கிரன் களத்திர காரகன் என்றாலும், பெண்களுக்கு செவ்வாயையும் களத்திர காரகனாக கூறுவார்கள்.
- ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடும், செவ்வாய் சுக்கிரனும் பலமாக அமைந்து கிரகச் சேர்க்கையின்றி சுபபார்வையுடன் இருந்தால் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் சூரியன், செவ்வாய் இருந்தாலும், 7ம் வீடு சனியின் வீடாக இருந்தாலும், சுபர் பார்வை 7ம் வீட்டிற்கும், 7ம் அதிபதிக்கும் இருந்தால் மத்திம வயதில் திருமணம் நடைபெறும்.
- சனிபகவான் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீட்டையும், 7ம் அதிபதியையோ, சுக்கிரனையோ பார்வை செய்தால் திருமணம் தாமதமாக நடைபெறும்.
- சனியானவர் 7ல் இருந்தாலும், குடும்ப ஸ்தானமான 2ல் இருந்தாலும் திருமணம் அமைய தடை தாமதம் ஏற்படுகிறது.
- சர்ப கிரகங்களான ராகு, கேது 7ல் இருந்தாலும் திருமணம் நடைபெற கால தாமதம் ஏற்படுகிறது. திருமண வயதில் சர்ப கிரகங்களின் திசையோ, புக்தியோ நடைபெற்றாலும் திருமணம் நடைபெற தாமதம் ஏற்படும்.
- இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வரவும். இவ்விரதம் ஒன்பது வாரங்கள் செய்து வர திருமணம் தோஷம் விலகும். திருமணம் கூடி வரும்.
- அரச மரமும் வேப்ப மரமும் இணைந்து உள்ள மரத்தின் கீழ் உள்ள பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் மஞ்சள் அபிஷேகம் செய்து பஞ்ச தீப எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி 11 முறை சுற்றி வந்து வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
- 12 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து, வாசனை மலர்கள், எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பால் சோறு, தேங்காய், வாழைப்பழம் போன்றவை வைத்து நவ கன்னியரை வணங்கி, முடிந்த அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு, விரைவில் மணம் கைகூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.
- திருமங்கைச்சேரி வரதராஜ பெருமாள் ராகு மற்றும் சர்ப தோஷங்கள் நீக்கும் பரிகார நிவர்த்தி தலமாக விளங்குகிறது. இத் தல வரதராஜ பெருமாளை வணங்கினால், திருமண தடைகள் நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும். 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருத்தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் மணல்மேடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
- வாலாஜாபேட்டை தன்வந்திரி பகவான் ஆலயத்தில் பவுர்ணமி நாட்களில் திருமண தடை நீக்கும் யாகம் நடைபெறுகிறது. யாகத்தில் பங்கேற்பதோடு அங்குள்ள ராகு கேதுவை ராகு காலத்தில் வழிபட பலன் கிடைக்கும்.
- நாகவழிபாட்டிற்காக கோயில்கள் பல இருந்தாலும் நாகத்தின் பெயரையே கொண்ட நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் வந்து வழிபட்டு சென்றால் தோஷம் நிவர்த்தியாகிறது.
- சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக் கண்ணியம்மன், கோலவிழியம்மன் ஆலயத்தில் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடலாம்.
- சென்னையில் திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் கன்னிப்பெண்கள் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் பிரத்தனை செய்து வந்தால். அவர்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கிட்டும்.
- கும்பகோணத்தில் அருகில் திருநாகேஸ்வரத்தில் ராகுபகவானையும், நாகை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் கேது பகவானையும் ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து வணங்கினால் திருமண யோகம் கிட்டும்.