கந்த சஷ்டி 2020 : திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை
கொரோனா பரவல் காரணமாக கந்தசஷ்டி திருவிழா தொடர்பான அனைத்து நிகழ்வுகளும், கோயிலுக்கு உள்ளேயே, உள் திருவிழாவாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்: கொரோனா காரணமாக திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழா மறறும் சூரம்சஹார நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயிலுக்கு வருவதை தவிர்த்து, பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே காப்புக்கட்டி கொண்டு, சுவாமியை வழிப்படுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா ஆறு நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து கோவிலில் தினசரியும் முருகனை தரிசனம் செய்வார்கள்.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியை வழிபட்டு செல்வர். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா வரும் 15ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.
கொரோனா பரவல் காரணமாக பக்தர்களை தவிர்த்து, சுவாமிக்கு மட்டும் காப்புக்கட்டும் நிகழ்வும், தொடர்ந்து 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வேல் வாங்குதல் மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்வுகள் கோயிலுக்கு உள்ளேயே, உள் திருவிழாவாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்த்து, பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே காப்புக்கட்டி கொண்டு, சுவாமியை வழிப்படுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த அறிவிப்பினால் பாரம்பரியமாக விரதம் இருந்து சூரசம்ஹாரம் காணும் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications