சந்திர கிரகணம் 2019 - எந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்யணும் தெரியுமா
மதுரை: விகாரி வருடம் ஆடி 1ஆம் தேதி ஜூலை 17ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை 1.31 மணி முதல் 4.30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் நாளை இந்தியாவில் தெரியும். கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் பூராடம், உத்திராடம், திருவோணம், கிருத்திகை, உத்திரம், கிரகண தோஷ முள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்தி கொள்ளவும்.
ஒவ்வொரு ஆண்டும் வானமண்டலத்தில் குறைந்தபட்சம் நான்கு கிரகணங்கள் சம்பவிக்கின்றன, பொதுவாக இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படுகின்றன, சில வருடங்களில் மூன்று சந்திர கிரகணம் கூட சம்பவிக்கும். சூரிய கிரகணம் அமாவாசை அன்றும், சந்திர கிரகணம் பெளர்ணமி அன்றும் சம்பவிக்கும்,

ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படுவதற்கு காரணமான கிரகங்களாகும், ஒன்பது கிரகங்களில் இந்த இரு கிரகங்களும் சாய கிரகங்கள் என்றழைக்கப்படும் நிழல் கிரகங்களாகும், விண்வெளியில் சூரியனது வட்டப் பாதையும் சந்திரனது வட்டப்பாதையும் வெட்டும் புள்ளிகள் ராகு, கேது என அழைக்கப்படுகிறது.
ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.
பெளர்ணமி அன்று முழு பௌர்ணமி நிகழும் நேரத்தில் சூரியனும் சந்திரனும் மிகவும் சரியாக 180 பாகை வித்தியாசத்தில் இருப்பார்கள், அதாவது சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார். பெளர்ணமி அன்று இவ்விருவரும் ராகு அல்லது கேதுவின் பிடியில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
வானியல் ரீதியாக சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே சந்திர கிரகணம். சந்திர கிரகணத்தன்று சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டு சந்திர கிரகணம் ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரஹணம் நிகழும் என கூறியுள்ளனர். அதை தொடர்ந்து நாளை ஏற்படும் சந்திர கிரஹணத்தில் அனைத்து வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்களின்படி சூரியன் ராகு உடன் மிதுனம் ராசியிலும் சந்திரன் கேது உடன் தனுசு ராசியிலும் இணைகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதியன்று மார்கழி 22ஆம் தேதியன்று ஞாயிறு கிழமை பூராடம் நட்சத்திரத்தில் அதிகாலை 5.04 மணி முதல் 9.18 மணிவரை கேது கிரகஸ்த சூரிய கிரகணம் ஏற்பட்டது. ஜனவரி 21ஆம் தேதி ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் ஏற்பட்டது. இம்மாதம் ஜூலை 3, 2019 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 3.20 திருவாதிரை நட்சத்திரத்தில் ராகு கிரகஸ்த முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த மூன்று கிரகணங்களும் இந்தியாவில் தெரியவில்லை.
புதன்கிழமை அதிகாலை நிகழ உள்ள பகுதி நேர சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். கிரகண ஆரம்பம் ஜூலை 17 அதிகாலை 1 மணி 30 நிமிடம் 52 விநாடி கிரகண முடிவு அதிகாலை 4 மணி 30 நிமிடம் கிரகணகாலமாகும். இந்த கிரகணங்கள் இந்தியாவில் தெரியும். ரிஷபம், கன்னி, தனுசு, மகரம் ஆகிய ராசிக்காரர்களும் முக்கியமாக பூராடம், உத்திராடம், திருவோணம், கிருத்திகை, உத்திரம் ஆகிய கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆறுகள், நதிகளில் குளித்து விட்டு கோவில்களுக்கு சென்று வந்து சாப்பிடலாம். ஆறு குளங்களில் குளிக்க முடியாதவர்கள் வீட்டில் குளித்து விட்டு பூஜை அறையில் சாமி கும்பிடலாம்.












Click it and Unblock the Notifications