மகாளய அமாவாசை: சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..என்னென்ன கட்டுப்பாடுகள்
சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலிலுக்கு செப்டம்பர் 23ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் மலையேற கொடுக்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் நமது முன்னோர்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். பவுர்ணமி முடிந்து பிரதமை முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நாம் கொடுக்கும் தானங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.
புரட்டாசி மாதம் எமனின் கோரைப்பற்கள் வெளியே தெரியும் மாதமாக இருப்பதால் புரட்டாசி அமாவாசை அன்று பிதுர்பூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். இறுதி காலத்தில் எம பயம் இருக்காது எனப் புராணங்கள் கூறுகின்றன. எனவேதான் மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க சிறப்பு வாய்ந்த அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசை.. இந்த நாளில் மறக்காமல் தானம் கொடுங்கள்.. முன்னோர்கள் ஆசி நிச்சயம் கிடைக்கும்
சதுரகிரி மகாலிங்கம் கோவில்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மழை காலங்களில் ஓடைகளில் வெள்ளம் செல்வதால் பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட மாட்டார்கள்.
மகாளய அமாவாசை
புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு வருகிற 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 26ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எந்த நேரத்தில் அனுமதி
பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
என்னென்ன கட்டுப்பாடுகள்
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி விழாவிற்கு அனுமதி கிடைக்குமா?
அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வருகிற 26ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கப்படுவதால் நவராத்திரி திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்புகள் வெளியிடப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.