சுப காரியத் தடைகளை ஏற்படுத்தும் மாந்தி தோஷம் - என்ன பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கும்
ஒருவரின் ஜாதகத்தில் மாந்தி எனும் குளிகன் ஒரு இடத்தில் அமைந்திருக்கும் அமைப்பைப் பொருத்து நல்ல மற்றும் கெடு பலன்கள் ஏற்படக்கூடும் இதற்கு பரிகாரம் செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கும்.
சென்னை: குடும்பத்தில் அமைதியின்மை, நிம்மதியற்ற நிலை ஏற்படுவது, வருமானம் போதுமான அளவிற்கு இல்லாவிட்டாலும் விரைய செலவு ஏற்படுவது கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்பட்டு தவிப்பவர்கள் பிறந்த ஜாதகத்தில் மாந்தி தோஷம் இருக்கிறதா என்று பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்ய வேண்டும். மாந்தி என்பவர் யார்? நவகிரகங்களை விட மாந்தியினால் பாதிப்பு அதிகமா? ஜாதகத்தில் மாந்தி எந்த இடத்தில் இருந்தால் என்ன பிரச்சினை வரும் என்று பார்க்கலாம்.
மாந்தி கிரகம் சனிபகவானின் மைந்தன் என்றும், சனியின் உப கிரகம் எனவும் ஜோதிடர்கள் அதன் அமைப்பை வைத்து பலன்கள் கூறுகின்றனர். சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவானவர் மாந்தி. தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர். மாந்தி தோஷம் உள்ளோர் அதற்குரிய பரிகாரம் செய்து வழிபடலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்துக்கு 2,5,8,11 ஆகிய இடத்தில் மாந்தி இருந்தால் அவர் செய்த புண்ணியங்கள், பாவத்திற்கான பலன்கள் அடுத்த பிறவில் அனுபவிக்க வாய்ப்புள்ளது. அதே போல் 1,4,7,10 ஆகிய இடத்தில் அமைந்திருப்பின், அவர் செய்யும் புண்ணியம், பாவத்திற்கான தண்டனைகள் அப்போதே அதாவது அவருக்கு ஏழரை சனி, அஷ்டமசனி வரக் கூடிய காலத்தில் அனுபவிக்க நேரிடும்.

மாந்தி எங்கிருந்தால் என்ன பாதிப்பு
லக்கினத்தில் அதாவது முதல் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் மறைமுக உடல் நோய்கள் கொண்ட குண்டான உடலமைப்பைப் பெற்றிருப்பார். சுப கிரக சேர்க்கை இருப்பின் அவருக்கு பொன், பொருள் சேரும். 2வது இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் அவரின் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமலும், பேச்சு, செயலில் தடுமாற்றம் ஏற்படும். 3வது இடத்தில் மாந்தி இருப்பின் பல நல்ல பலன்கள் கிடைக்கும். தைரியமானவராகவும், துணிவு மிக்கவராகப் பலரை வழிநடத்தக் கூடிய திறனை பெற்றிருப்பார். புதிய முயற்சிகள் செய்து வெற்றிகளைக்குவிப்பார்.
ஜாதகத்தில் 4ஆம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதித்தல். நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். 5ஆம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் புத்திர தோஷம் ஏற்படக்கூடும். குறைந்த வயதில் கண்டம் ஏற்படலாம். 6ஆம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் பிறருக்கு உதவி செய்யக் கூடிய நல்ல மனம் படைத்தவராக, ஆரோக்கியம் மேன்மையுடன் கூடிய நீண்ட ஆயுள் உடையவராக, எதிரிகளை வெல்லக் கூடியவராக இருப்பார். 7வது இடமான களத்திர ஸ்தானத்தில் மாந்தி இருந்தால் மனைவியின் சொத்துக்களை அழிக்கக் கூடியவராக, சிலரை நம்பி ஏமாறக்கூடிய நிலை ஏற்படும்.8ம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் அதீத பசி கொண்டவராகவும் வீண் செலவு செய்பவராகவும் இருப்பார்.
9வது இடத்தில் மாந்தி இருந்தால் தந்தைக்கு பாதகத்தை ஏற்படுத்தும். எப்போதும் பிரச்னைகளுடன் வாழக்கூடிய, பணக்கஷ்டத்துடன் இருப்பவராக வாழ்வார்.10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வாழ்க்கை முழுவதும் சுயநலத்துடன் இருப்பார். யாரைப் பற்றியும் கவலை கொள்ளாதவராக இருப்பார். இருப்பினும் சிறப்பாக உழைத்து, தன் வாழ்க்கையை படிப்படியாக முன்னேற்றக்கூடியவராக இருப்பார். 11வது இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வாழ்வில் நல்ல செல்வமும், செல்வாக்கும் கொண்டிருப்பார்கள். நல்ல துணை, மிகுந்த புகழ் மிக்கவராக திகழ்வார். 12வது இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் செலவுகள் ஏற்படும் சோம்பேறியாக இருப்பார். ஜாதகத்தில் மாந்தியுடன் இருக்கும் சுப கிரகங்களின் சேர்க்கை, நல்ல பார்வையைப் பொறுத்து இந்த பலன்கள் மாறுபடலாம்.

மாந்தி பரிகார தலங்கள்
பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காடு ஆலயம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் மாந்தி வழிபட்ட லிங்கம் உள்ளது, அங்கே சென்று அந்த சிவலிங்கத்தை வழிபட்டாலும் மாந்தி தோஷம் நீங்கும்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பக்கத்தில் திருநரையூர் எனும் ஸ்தலத்தில் சனிபகவான் தனிச்சந்நிதியில் எழுந்தருளுகிறார். தன் மனைவி நீலாதேவி மகன்கள் குளிகன் மற்றும் மாந்தி என குடும்பத்தோடு அருள்பாலிக்கிறார். அங்கே சென்று முறையாக பூஜை செய்து வழிபட்டால் மாந்தி தோஷம் விலகும். தசரத சக்கரவர்த்தி தனக்கு ஏற்பட்ட நோய் தீர, இத்தலத்துக்கு வந்ததாகவும், இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சனி பகவானை வழிபட்டு நிவாரணம் பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது. ராமபிரான், ராவணனை வதம் செய்து, அயோத்தி திரும்பும் போது, தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து நீராடி, மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டுள்ளார்.
இதே போல தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டைக்கு அருகே விளங்குளம் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தில் சனி பகவான் குடும்பத்தோடு காட்சி தருகிறார். அங்கே சென்று வழிபட்டாலும் மாந்தி தோஷம் இல்லாமல் போகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிலும் குறிப்பாக கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள். அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து இந்த மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைத்துக்கொள்ளலாம். குறிப்பாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவாக புத்திர பாக்கியம் பெறுவார்கள்.
மாந்தி தோஷம் ஏற்பட்டால் குடும்பத்தில் அமைதியின்மை, நிம்மதியற்ற நிலை, வருமானம் போதுமான அளவிற்கு இல்லையே என்று கலங்குபவர்கள், குடும்பத்தினர் ஆளுக்கொரு பக்கம் பணிபுரிந்து கொண்டு சேர்ந்து வாழ முடியாமல் தவிப்பவர்கள் என்றிருந்தால், மேற்கண்ட பரிகாரங்கள் மிகப்பெரிய பலன்களைக் கொடுக்கும்! பிரச்சினைகள் விரைவாகத் தீரும்.

சூரிய வழிபாடு
சிவபெருமானை வழிபாடு செய்வதும், தினமும் காலையில் சூரிய வழிபாடு செய்வதும், ஆதித்யஹிருதயம் சொல்வதன் மூலமும் கேட்பதன் மூலமும் மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைக்கும். பொதுவாக எந்த ஒரு மனிதர் இறந்தாலும் அவரை தூற்றுவது, அதாவது அவர் கெட்டவராகவே இருந்தாலும் இறந்த பிறகு அவரை தூற்றுவது பிரேத சாபம் என்னும் கடுமையான தோஷத்தைத் தரும். இதுவும் மாந்தி தோஷத்தில் ஒரு பகுதிதான். எனவே சவ ஊர்வலங்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதும், இறந்தவரின் ஆன்மாவுக்காக ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்வதும், சவ அடக்கத்துக்கு நம்மால் முயன்ற உதவிகளைச் செய்வதும், மாந்தி தோஷ பாதிப்பைப் போக்கும்.












Click it and Unblock the Notifications