மார்கழி திருவாதிரை : நடராஜருக்கு களி படைத்து வணங்கும் வழக்கம் எப்படி வந்தது தெரியுமா?
திருவாதிரையில் ஒரு வாய்க்களி என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மையைத் தரும்.
சிதம்பரம்: திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி செய்து படைப்பார்கள். களி என்பது ஆனந்தம் என்றும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும். திருவாதிரையில் ஒரு வாய்க்களி என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மையைத் தரும். ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் இறைவனுக்கு களி படைக்கும் வழக்கம் எப்படி வந்தது என்று பார்க்கலாம்.
சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் சேந்தனார் என்றொரு விறகு வெட்டி வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின்னர் தான் சேந்தனார் சாப்பிடுவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாகி விட்டன. அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க கூட அவரிடம் காசு இல்லை. எனவே அன்றைய தினம் கேழ்வரகில் களி செய்து வைத்துக்கொண்டு வீட்டிற்கு யாராவது சிவனடியார்கள் வருகிறார்களா என்று எதிர்பார்த்திருந்தார்.
மழை வேறு பெய்து கொண்டிருந்தது...சோதனையாக அன்று யாருமே வரவில்லை. மனம் நொந்து போன சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த நினைத்த, நடராஜப் பெருமான், சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார்.

சிவனடியாரைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த சேந்தனார் தான் சமைத்து வைத்திருந்த களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் சாப்பிட்டதோடு மிச்சமிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்த போது நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள் இருந்தன. அதனை உடனே அரசருக்கு அறிவித்தார்கள். உடனே அரசருக்கு வந்த கனவை நினைத்துப்பார்த்தார்.
கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். சேந்தனாரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழாவிற்கு வந்திருந்தார்.
சிவனைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது.
சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.
இதைப்பார்த்த அரசனும் அமைச்சர்களும் சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் விழுந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார்.
அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், அதை நினைவு கூறும் வகையிலேயே இன்றைக்கும் மார்கழி திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

திருவாதிரை களி வீட்டிலேயே செய்ய டிப்ஸ் :
தேவையானவை :
பச்சரிசி அரிசி - ஒரு கப்
மண்டை வெல்லம் - ஒன்றரை கப்
தண்ணீர் - இரண்டரை கப்
பாசிப்பருப்பு, வெள்ளை உளுந்து - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - ஒரு கப்
முந்திரி, ஏலக்காய்த்தூள்
நெய் - சிறிதளவு
செய்முறை:
அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தப்பருப்பை தனித்தனியாக நன்றாக வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
அரிசியை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதிகம் மாவு போல வேண்டாம். அதே போல வறுத்த உளுந்தையும் அரைத்துக்கொள்ளவும்.
பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும் 2 விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். பிறகு மீண்டும் நன்றாக கொதிக்கவிடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கும் வெல்லப்பாகில் அரைத்து வைத்த அரிசி மாவு, உளுந்த மாவு, பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து, கொஞ்சம் நெய் விட்டு நன்றாகக் கிளறவும். அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவேண்டும் அடி பிடிக்க விடக்கூடாது.
இந்த கலவை வெந்த உடன், நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூளை தூவிக் கலந்து இறக்கவும். ஆடல் அரசன் நடராஜருக்கு படைத்த பின்னர் பிரசாதம் சாப்பிட அல்வா போல திருவாதிரைக்களி சுவையாக இருக்கும்.












Click it and Unblock the Notifications