மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் துலா உற்சவம் கோலாகலம் - திருத்தேரோட்டம், கடைமுக தீர்த்தவாரி
மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுமுறை: ஐப்பசி மாத துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா நாளை 16ம் தேதி மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது.
ஆயிரம் ஆனாலும் மாயூரம் போலாகுமா என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு சிறப்பானது மயிலாடுதுறை.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவசுமைகளை போக்கிகொண்டதாக புராணம் கூறுகிறது.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். ஐப்பசி 1ம்தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. மேலும் பத்துநாள் உற்சவமாக மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரிகரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதே போல் இவ்வாண்டு துலா உற்சவம் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நாள் தீர்த்தவாரியுடன் தொடங்கியது. இதில் கடைசி பத்துநாள் உற்சவம் கடந்த 7ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13ம் தேதி திருக்கல்யாணமும் அதனை தொடர்ந்து இன்று திருத்தேரோட்டமும் நடைபெற்றது.
அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினார். திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பண்டார சன்னதி சுவாமிகள் வடம் பிடித்து திருத்தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்திழுக்க திருத்தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா நாளை 16ம் தேதி மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது. கார்த்திகை 1ம்தேதி முடவனுக்கு இறைவன் காட்சி தந்த முடவன் முழுக்கு திருவிழாவும் நடைபெற உள்ளது.
ஐப்பசி மாத துலா உற்சவத்தில் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் நீராடினால் பாவங்கள் அனைத்து நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அதன்படி, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவத்தில் லட்சக்கணக்கான மக்கள் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது காவிரியில் போதிய அளவுக்கு தண்ணீர் வருவதால், பழமைமிக்க மயிலாடுதுறை துலா உற்சவத்தில் அனைவரும் பங்கேற்க ஏதுவாக, துலா உற்சவத்தின் கடைசி நாளான நாளை நவம்பர் 16ஆம் நாள் உள்ளூர் விடுமுறை அளித்து, உற்சவத்துக்கான முன்னேற்பாடுகளை முன்கூட்டியே அரசு செய்ய வேண்டும் என மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications