மதுரை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் கோலாகலம் - ஆவணி வரைக்கும் இனி அம்மன் ஆட்சிதான்
பட்டாபிஷேகம் முடிந்ததால் மதுரை மாநகரில் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்கியதாகவும், சித்திரை முதல் ஆவணி மாதங்கள் வரை மீனாட்சியின் ஆட்சி நடப்பதாகவும் ஐதீகம்.
மதுரை: வைர கிரீடம் சூடி, கையில் நவரத்திர செங்கோல் பிடித்து பட்டத்தரசியாக முடி சூட்டப்பட்ட மதுரை மீனாட்சியைக் காண கண் கோடி வேண்டும். சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம் நேற்று இரவு நடைபெற்றது. இனி நான்கு மாதங்களுக்கு மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சிதான்.
சித்திரை மாதத்தில் மதுரை குலுங்க குலுங்க திருவிழா நடைபெறும். ஒருபக்கம் மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் தேரோட்டம் களைகட்ட இன்னொரு பக்கம் அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு வந்து வைகையில் எழுந்தருளுவார்.
உச்சத்தில் கொரோனா... மேற்கு வங்கத்தில் பிரசாரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு கோவிலுக்குள்ளேயே அனைத்து திருவிழாக்களும் முடிந்து விட்டன. இந்த ஆண்டும் கள்ளழகர் மதுரைக்கு வரப்போவதில்லை. அழகர் மலையிலேயே அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறப்போகிறது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மதுரை சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து காலை, மாலையில் ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. புறப்பாடு முடிந்தவுடன் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
ஜொலி ஜொலிக்கும் நகைகள்
மதுரை மீனாட்சி அம்மனுக்கு சித்திரை திருநாள் நடைபெறும் பத்து நாட்களும் விதம் விதமான நகைகளை அணிவித்து அழகு பார்ப்பார்கள். அதுவும் பட்டாபிஷேகத்தன்று கொஞ்சம் கூடுதல் நகைகளால் அலங்கார ரூபினியாய் காட்சி தருவார் மீனாட்சி அம்மன். ஹம்பி நகரத்து மன்னர் ராயர் வழங்கிய கிரீடத்தை சூடிக்கொண்டு பட்டத்தரசியாக ஜொலிக்கும் மீனாட்சி தரிசித்தாலே போதும் பிறவிப்பயன் கிடைத்து விடும். இந்த ஆண்டு பட்டாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றாலும் அம்மன் தரிசனம் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு கிடைத்தது.
முடி சூட்டிக்கொண்ட அம்மன்
எட்டாம் திருநாளான நேற்று பட்டாபிஷேகத்தன்று காலையில் மீனாட்சி, சுந்தரேசுவரர் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி ஆடி வீதி களில் வலம் வந்தனர். இரவு 8.05 மணிக்குமேல் 8.30 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது.
ராயர் கிரீடம்
வெள்ளி சிம்மாசனத்தில் அலங்காரமாக அமர்ந்திருந்த மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தாலான செங்கோல் வழங்கப்பட்டு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மனிடமிருந்து செங்கோல் கோயில் தக்கார் கருமுத்து தி. கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. செங்கோலை பெற்ற தக்கார் கரு முத்து கண்ணன், சுவாமி சன்னதி 2ம் பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் ஒப்படைத்தார்.
திக் விஜயம்
பட்டத்து ராணியாக அம்மன் முடிசூட்டப்பட்டதால் இனி மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்கியதாகவும் மதுரை மாநகரில் சித்திரை முதல் ஆவணி மாதங்கள் வரை மீனாட்சியின் ஆட்சி நடப்பதாகவும் ஐதீகம். ஒன்பதாம் திருநாளான இன்று திக்கு விஜயம் நடைபெறுகிறது.
பக்தர்களுக்கு அனுமதி எப்போது
சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளைய தினம் நடைபெறுகிறது.
திருக்கல்யாணம் காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் வீட்டிலிருந்தபடியே காணும் வகையில் கோயில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளங்களில் ஒளிபரப்பப்படுகிறது. பிற்பகல் 3.30 முதல் 5.30 மணி வரையும், 7.30 முதல் 9 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக் கப்படுவர்.
தேரோட்டம் ரத்து
மதுரையில் சித்திரை தேரோட்டம் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஞாயிறன்று சட்டத்தேர் காலை 5 மணி முதல் 7 மணிக்குள் நடைபெறும். மீனாட்சி சுந்தரேசுவரர் பிரியா விடை அம்மனுடன் சட்டத்தேரில் வலம் வருவார். ஏப்ரல் 26ஆம் தேதி 12ஆம் திருநாள் சுவாமி புறப்பாடுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.