சகடதோஷம் நீங்கி சந்தோஷம் தரும் தேரோட்டம் : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப்பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோரோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தைக் காண சென்னை மக்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த மக்களும் குவிந்துள்ளதால் மாட வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மயிலையே கயிலை, கயிலையே மயிலை என்னும் புகழப்படும் மயிலாப்பூரில் சிவ ஆலயங்களுக்கு குறைவில்லை. அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது கபாலீஸ்வரர் ஆலயத்தில்தான். திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றியது இந்த தலத்தில்தான். வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான்.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் இறைவன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகார நந்தி, ரிஷபவாகனம் என வலம் வந்த கபாலீஸ்வரரை தினசரியும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாப்பூரில் தேரோட்டம்
ஏழாம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. தேரில் இருக்கும் கபாலீஸ்வரருக்கு வில், அம்புடன் அலங்காரம் நடைபெற்றது. திரிபுர சம்ஹாரம் நடைபெறும் பொருட்டே இந்த வில், அம்பு அலங்காரம். நான்கு மாட வீதிகளில் ஆடி அசைந்து வந்த தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கூடிநின்ற பல்லாயிக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
மாட வீதிகளில் குவிந்த பக்தர்கள்
தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மாட வீதிகளில் குவிந்திருந்தனர். கபாலீஸ்வரா என்ற பக்தி முழக்கத்தோடு திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சென்னை மட்டுமல்லாது புறநகர் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தேரோட்டத்தைக் காண குவிந்திருந்தனர்.
சகடதோஷம் நீங்கும்
ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். இந்த யோகம் இருப்பவர்கள் சில நேரங்களில் உச்சத்திலும் சில நேரங்களில் துன்பப்பட்டுக்கொண்டும் இருப்பார்கள். தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடுவது போல திருக்கோயில்களின் தேரோட்டம் சகட தோஷத்தை போக்கி ஏற்ற இரக்கங்களை நீக்கி நிலையான வாழ்வை தந்துவிடும் என்பது நம்பிக்கை. கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் பார்ப்பவர் அனைவரும் சகடதோஷம் நீங்கி நிலையான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
உயிரிழந்த பூம்பாவை
பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அங்கம் பூம்பாவையை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சி மயிலாப்பூர் குளக்கரையில் நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நாளை மாலை 63 நாயன்மார்களுக்கும் கபாலீஸ்வரர் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
பங்குனி உத்திர திருக்கல்யாணம்
ஒன்பதாம் நாள் சிவபெருமான் பிட்சாடனார் வடிவிலும் மகாவிஷ்ணு மோகினி வடிவிலும் காட்சியளிப்பர். பத்தாம் நாள் காலை கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார். பவுர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பார் அன்னை பார்வதி. பங்குனி உத்திர தினத்தில் அம்பாள் திருக்கல்யாணத்தைப் பார்க்கிறவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.