மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இன்று முதல் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்குகிறது.
மதுரை : சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இன்று முதல் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்குகிறது.
மதுரையில் பாண்டிய மன்னன் மலையத்துவராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து நகரை ஆண்டு வந்தனர்.
இதை நினைவுபடுத்தும் வகையில் ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை மதுரையை சுந்தரேசுவரப்பெருமானும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி செய்வதாக ஐதீகம்.
அம்மன் வீதி உலா
உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 28ஆம் தேதி நாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலை மாலை இரு நேரங்களிலும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியா விடையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் 7ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு அம்மன், சுவாமி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.
சித்திரை திருவிழா 8ஆம் நாள்
சித்திரை திருவிழாவின் 8ஆம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது. கோலாகலமான இந்த விழா இரவு 7 மணியளவில் விக்னேசுவர பூஜையுடன் தொடங்கும் இந்த விழா அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்ட பின், வைரக் கற்கள் பதிக்கப்பட்ட ‘ராயர் கிரீடம்' எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்படும்.
பட்டாபிஷேகம்
கோவிலில் உள்ள அனுக்ஞை விநாயகரிடம் இருந்து செங்கோலும், கிரீடமும் பெறப்பட்டு, இரவு 7.40 மணியளவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டப்படும். இதைத்தொடர்ந்து ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோலும், மீன் கொடியும் மீனாட்சி அம்மனுக்கு வழங்கப்படும். இதன் பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
மீனாட்சி ஆட்சி
சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து 4 மாசி வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதைத்தொடர்ந்து இனி மதுரையில் 4 மாதங்களுக்கு மீனாட்சி ஆட்சி நடக்கிறது. அன்னையின் ஆட்சி மதுரையில் ஆரம்பமாகி விட்டது.
மீனாட்சி திருக்கல்யாணம்
நாளை திக் விஜயம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து மதுரை மட்டுமல்லாது தமிழக மக்களே ஆவலுடன் எதிர்பார்க்கும் மீனாட்சி திருக்கல்யாணம் மே 7ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தெய்வீக திருமண விழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் கூடுவார்கள். மே 8ஆம் தேதி கூடல் மாநகரமான மதுரையில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.