திருநள்ளாறில் டிசம்பர் 27ல் சனிப்பெயர்ச்சி - எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்
டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம்பெயர்சி அடைகிறார்.
புதுச்சேரி: திருநள்ளாறில் சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் நாள் அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைகிறார் இதனையொட்டி இன்று பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. சனிபகவான் இடப்பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இந்த கோயிலில் சனி பெயர்ச்சி விழா நாட்களில் மட்டுமல்லாது சனிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். நள தீர்த்த குளத்தில் நீராடி சனிபகவானை தரிசனம் செய்வார்கள்.
சனிபகவான் நீதிமான் தவறு செய்தவர்களைத்தான் தண்டிப்பார். நல்லவர்களுக்கு நல்லதே செய்வார் எனவே பயப்பட தேவையில்லை. சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. தனுசு ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும்.
சனியால் பாதிப்பு வருமா
நவகிரகங்களில் சனிபகவானுக்கு மக்கள் அதிகம் பயப்படுகிறார்கள். காரணம் சனி ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிக்கிறார். நிறைய படிப்பினைகளை கற்றுத்தந்து விட்டுத்தான் செல்வார். ஏழரை சனி காலம் என்றால் கேட்கவே வேண்டாம். வாழ்க்கையின் அடி முதல் முடி வரைக்கும் ஆட்டி படைத்து விடுவார். ஏழரை சனியின் பிடியில் உள்ள விருச்சிக ராசிக்காரர்கள்,தனுசு, மகரம் ராசிக்காரர்களை கேட்டால் தெரியும் பட்ட கஷ்டங்கள் என்ன என்று ஒரு புத்தகமே எழுதுவார்கள்.
மேஷம்
சனி பகவான் மேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமர்வதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. இந்த கால கட்டத்தில் வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் சொர்ண சனீஸ்வரரை தரிசனம் செய்து வாருங்கள்.
ரிஷபம்
வாக்கிய பஞ்சாங்கப்படி அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். நிறைய தர்மங்களை செய்யுங்கள். ஏனெனில் இது தர்ம சனி காலம். வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
மிதுனம்
சனிபகவான் எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை. மன நிம்மதிக்கு ஒருமுறை திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசனம் செய்து வாருங்கள்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களே இதுநாள் வரை ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்த இனி உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனிபகவான் உங்க ராசியை பார்ப்பதால் கண்டச்சனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். குருவின் பார்வையும் உங்களின் ராசிக்கு கிடைப்பதால் குதூகலம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களே, சனி பகவான் ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். உங்களுக்கு ராஜயோக காலம். சுகங்கள் தேடி வரும். செல்வமும் செல்வாக்கும் கூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறப்போகிறது. இந்த சனிப்பெயர்ச்சியால் நல்லது அதிகம் நடக்கும். சனி உங்க ராசிக்கு ஆறுக்கு உடையவர் ஐந்துக்கு உடையவர் என்பதால் வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, சனிபகவான் உங்கள் ராசியில் உச்சமடைபவர் என்பதால் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டார். நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும் வீடு, கார் என வாங்குவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே கடந்த ஏழரை ஆண்டுகாலமாக சனிபகவானின் பிடியில் இருந்து அல்லல்பட்டு துயரப்பட்டு வந்திருப்பீர்கள். 2020 ஜனவரி முதல் உங்கள் துயரங்கள் குறையும், சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது. தொழிலில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பல ஆண்டுகாலமாக பணம் வாங்கி விட்டு ஏமாற்றியவர்கள் திருப்பி தருவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாவது ராசி. சனி விருச்சிகத்தை ஆட்டி படைத்தது. இனி நன்மைகள் தேடி வரும் காலம்.வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு தனாதிபதி தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். தடைகளையும் சோதனைகளையும் கொடுத்த சனி விலகும். இதுநாள் வரை குழப்பத்தில் இருந்தீர்கள். வருமானத்திற்கு வழியின்றி தவித்து வந்தீர்கள். இனி பணவருமானத்திற்கு வழியை ஏற்படுத்துவார். நஷ்டங்களை சந்தித்த நீங்கள் இனி லாபத்தை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனத்தில் செல்லும் போவது கவனம் தேவை.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் தொழில் தொடங்குவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்யும் காலம். பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். உழைப்பால் உயர்ந்த நீங்கள் இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்றத்தை தரும். பிசினஸ் செய்ய நினைத்தவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி தரும். நிறைய உதவி கிடைக்கும் வளர்ச்சிக்கு உதவும் நன்மைகள் கிடைக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்கு 12ஆம் வீட்டில் சனி அமரப்போகிறார். விரைய சனி. உங்க ராசிநாதன் சனி அதிக பாதிப்பை தர மாட்டார். விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. சனி தசை நடப்பவர்களுக்கு இது பூரண பலனைத் தரும். சில விசயங்களில் கவனம் தேவை. பண விரையம் வரும் லாப சனியாக இருந்து விரைய சனியாக மாறுகிறார். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. அப்படி செலவு பண்ணாம சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவு வரும். வீணான வாக்குவாதங்கள், வார்த்தைகளை விட வேண்டாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள். அந்நிய தேசத்து வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்.