ஆடித்தபசு கோலாகலம்: ஒற்றைக்காலில் தவமிருந்த கோமதி அம்மனுக்கு சங்கர நாராயணராக காட்சி அளித்த இறைவன்
ஒற்றைக்காலில் ஊசி முனையில் தவமிருந்த கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சி அளித்தார் இறைவன் சிவபெருமான். நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும் நேரலையில் ஏராளமான பக்தர்கள்
சங்கரன்கோவில்: முழு நிலவு வானத்தில் ஜொலிக்க ஊசி முனையில் ஒற்றைக்காலில் தவமிருந்த கோமதி அம்மனுக்கு இன்று சங்கரநாராயணராக காட்சி அளித்தார் சிவபெருமான். சங்கரன் கோவிலில் இன்று ஆடித்தபசு காட்சி அற்புதமாக கோவிலுக்குள் நடைபெற்றது. கோமதி அம்மனின் தவக்கோலத்தையும் சங்கர நாராயணராக காட்சி அளித்த இறைவனையும் பக்தர்கள் நேரலையில் கண் குளிர தரிசனம் செய்தனர்.
அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு என்று ஒரு பழமொழி உள்ளது. சைவமும் வைணவமும் இணைந்து உள்ள தலம் சங்கரன் கோவில். இங்கு சிவனும் விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
அடுத்த கொரோனா அலை..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம் புதிய உருமாறிய வைரஸ் வருமா? எய்ம்ஸ் இயக்குநர் பளிச்
சிவனும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிக்கும் திருக்கோலத்தை பலரும் பார்த்திருப்பார்கள். சங்கரன் கோவிலில் சிவனும் விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி அளித்த திருக்கோலம் ஆடி பவுர்ணமி தினமாக இன்று நிகழ்ந்தது. அந்த அற்புத திருக்கோலத்தை உலக மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே கோமதி அன்னை இந்த சங்கரன்கோவிலில் ஒற்றைக்காலில் நின்று தவமிருந்து வரம் பெற்றிருக்கிறார்.
கோமதி அன்னை தவம்
மனிதர்களாக பிறந்த நாம் ஏதாவது காரியம் சாதிக்க வேண்டும் என்றால் ஒற்றைக்காலில் நின்று காரியம் சாதிப்பார்கள். அதுபோல தான் நினைத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஊசி முனையில் ஒற்றைக்காலில் தவமிருந்தார் அன்னை கோமதி.
காட்சி அளித்த இறைவன்
கோமதி அம்மன் தன் வலக் காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்த கோலத்தில் அம்பாள் தபசுக் காட்சி அருள்கிறாள் அன்னையின் தவத்தை மெச்சியே இறைவன் சங்கர நாராயணராக காட்சி அளித்தார். பாதி சங்கரனாகவும் பாதி நாராயணராகவும் இணைந்து அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவர் வாயில் மண்ணு என்று உணர்த்தும் காட்சி அளித்தார் இறைவன்.
மகா யோகினி சக்தி பீடம்
சங்கரன் கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கோமதி அன்னையின் கருணைக்கு ஈடு இணையில்லை. அன்னையின் அருள் கடாட்சம் பெற்றவர்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளை எளிதில் அடைவார்கள். கோமதி அன்னை அருள்புரியும் சங்கரன்கோவில் மகாயோகினி சக்தி பீடம்.
பிறந்த வீட்டு பெருமை
அரியும் சிவனும் ஒன்றென உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன் கோவில். தனது ஒருபாகத்தை உடன் பிறந்தவருக்கு விட்டுக்கொடுத்து பிறந்த வீட்டுப் பெருமையையும், புகுந்த வீட்டு தியாகத்தையும் நிலைநிறுத்தியவள் அன்னை பார்வதி.
ஆலயத்தில் தரிசனம்
சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் ஈசனாகவும், இடப்பக்கம் திருமாலாகவும் வீற்றிருப்பார். மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக அருள்பாலிக்கிறார்.
கோமதியின் அருள்
அன்னையின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களும், சங்கரன் கோவில் சங்கரலிங்கனாரை குல தெய்வமாக வணங்குபவர்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு கோமதி என்று பெயர் சூட்டி அழைக்கின்றனர்.
ஆடி மாத பௌர்ணமி
சங்கரன் கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆடித்தபசு விழா கொண்டாடப்படுகிறது. கோமதியன்னையின் ஆடித்தபசு விழாவில் கலந்துகொண்டு, தவக்கோலத்தில் காட்சி தரும் கோமதி அன்னையையும் சங்கரநாராயணரையும் தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும் சகல ஐஸ்வர்யங்களும் யோகங்களும் கைகூடி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன்காரணமாகவே தென்மாவட்ட மக்கள் ஆடித்தபசு நிகழ்ச்சியைக் காண சங்கரன்கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பக்தர்கள் தரிசனம்
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஆடித்தபசு விழா கோவிலுக்குள்ளேயே நடைபெற்றது. பக்தர்களால் நேரில் தரிசனம் செய்ய முடியாவிட்டாலும் நேரலையில் ஒளிபரப்பானதை கண்டு தரிசனம் செய்தனர்.
நோய் தீர்க்கும் தலம்
தென் மாவட்டங்களில் உள்ள சிவ பெருமானின் பஞ்ச பூத தலங்களில் இந்தக் கோயில் நிலம் சம்பந்தமான மண் தலமாகத் திகழ்கிறது. இதனால், இக்கோயிலில் உள்ள 'புற்றுமண்" வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் சுகம் காண்பார்கள். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும் என்பதும், வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது என்பதும், வயல், வீடுகளின் செல்வம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை உள்ளது.